பிக் பாஸ் போனது தான் நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

சினிமாவில் நடித்த ஒரு சில நடிகர்கள் தங்களின் நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அதனை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தாமல் தற்பொழுது ஆல் அட்ரஸ் இல்லாமல் போய் உள்ளனர். அப்படியாக ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஓவியா: தமிழ் சினிமாவில் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஓவியா. தனது படங்களின் மூலம் பிரபலமாகாத இவர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அதிக ரசிகர்களுக்கு சொந்தக்காரரானார். அதிலும் ரசிகர்களால் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்றார். இதனை வைத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்த்த நேரத்தில் ஒரு சில படங்களோடு காணாமல் போய்விட்டார்.

பரணி: சினிமாவில் கல்லூரி, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பரணி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சக போட்டியாளர்களின் நடவடிக்கையால் மனரீதியாக பாதிக்கப்பட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து  தமிழில் பொட்டு, நாடோடிகள் 2 போன்ற  ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சரிவர பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

ஸ்ரீ: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தது மட்டுமல்லாமல் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் இந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார். தற்பொழுது சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வருகிறார்.

ஆரி: இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டசுழி  திரைப்படத்தின் மூலம்  திரைத் துறையில் அறிமுகமானவர் தான் ஆரி. அதிலும் நெடுஞ்சாலை, மாயா போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற பின் நிறைய படங்களில் கமிட் ஆகுவார் என்ற நினைத்த நிலையில், கதை சரியில்லை என்று வரும் பட வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்தார். இதன் விளைவாக தற்பொழுது ஆரி எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வருகிறார்.

கஞ்சா கருப்பு: பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததால் இவரது பெயர் கஞ்சா கருப்பு என்றே மாறியது. அதன்பின் இவர் தனது வெள்ளந்தியான நடிப்பிற்காகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றே சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சக போட்டியாளர்களை அவமரியாதியாக நடத்தியதால் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றார்.  இதனாலையே தற்பொழுது சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கி விட்டார்.

ஆர்த்தி: சினிமாவில் 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ணக் கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஆர்த்தி. அதன்பின் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு, ஜூலியுடன் இவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அதன்பின் இவர் சினிமாவில் இருந்தே  காணாமல் போய் உள்ளார்.

ஜாங்கிரி மதுமிதா: தமிழில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஜாங்கிரி மதுமிதாவாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தனது படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் நடிகை மதுமிதா கலந்து கொண்டு பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறி  தன்னுடைய கருத்து தான் நியாயமானது, என்று கூறி கைகளை அறுத்துக் கொண்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார். தற்பொழுது கைவசம் எந்த படங்களும் இல்லாமல் இருந்து வருகிறார். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →