Top 5 Actors Playing Disability Character Movies: கோலிவுட்டில் உச்ச நாயகனாக இருக்கக்கூடிய டாப் ஹீரோக்கள் சவால் நிறைந்த கதாபாத்திரங்களை எடுத்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மாற்றுத்திறனாளியாக மாஸ் ஹீரோக்கள் நடித்து அசத்திய 5 கேரக்டர்களை பற்றி பார்ப்போம்.
அஜித் – வில்லன்: ‘அல்டிமேட் ஆக்சன் கிங்’ ஆக ரசிகர்களை ஒவ்வொரு படத்திலும் மகிழ்வித்த அஜித் ‘வில்லன்’ படத்தில் சிவா, விஷ்ணு போன்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் விஷ்ணு என்ற கேரக்டரில் மூளை வளர்ச்சி குறைந்தவராக தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டினார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் சிவா கேரக்டரில் அவ்வப்போது அஜித் போலீஸில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் உடனடியாக விஷ்ணு போலவே வாயை கோணிக் கொண்டும் காலை இழுத்து இழுத்து நடந்து நிஜ மாற்றுத் திறனாளியாகவே உடனடியாக மாறி அவர்களுக்கு தண்ணீர் காட்டினார்.
கமல் – அபூர்வ சகோதரர்கள்: தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்ளும் கமலஹாசன் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு குள்ள மனிதனாக அப்பு என்ற கேரக்டரில் நடித்தார்.
இதே படத்தில் சேதுபதி, ராஜா போன்ற இன்னும் இரண்டு கேரக்டர்களில் சாதாரண மனிதர்களின் உயரத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். இந்தப் படத்தில் சர்க்கஸ் நடத்தக்கூடிய ‘அப்பு’ கிளி, குரங்கு, யானை போன்ற விலங்குகளுடன் பழகும் விதமும், படம் முழுக்க முழங்கால் போட்டுக்கொண்டு தன்னை அரை மனிதனாக காட்டி அசத்தினார்.
ரஜினிகாந்த் – முள்ளும் மலரும்: மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் முள்ளும் மலரும். இந்த படத்தில் ரஜினி எதிர்பாராத விபத்தில் தன்னுடைய ஒரு கையை இழந்து விடுவார். இரண்டு கை இருக்கும்போது எந்த அளவிற்கு கெத்தாக இருந்தாரோ அதேபோலவே ஒரு கையை இழந்தும் ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ என படம் முழுக்க முறுக்குடன் சொல்லக்கூடிய கெத்தான டயலாக் சூப்பர் ஸ்டாரை மாஸ் ஹீரோவாகவே காட்டியது.
அதுமட்டுமல்ல இந்த டயலாக்கை சோகமான காட்சியிலும் அவர் சொல்லும் போது பலரையும் உருக வைத்தது. இந்த படத்தில் அண்ணன் தங்கை பாசப் போராட்டத்தை அழகாக காட்டினார்கள். ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு இருந்தது. அதேசமயம் கையை இழந்தும் தன்னுடைய குடும்பத்திற்காக ரஜினி படும் பாடு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களை கண்முன் காட்டியது.
சூர்யா – பேரழகன்: சசி சங்கர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் பேரழகன். இந்த படத்தில் ஒரு ஜோடி சூர்யா, ஜோதிகா நலமுடன் எந்த குறையும் இல்லாமல் இருக்கக்கூடிய காதலர்களாக இருந்தனர். ஆனால் இன்னொரு ஜோடி சூர்யா, ஜோதிகாவை பார்த்தால் அடையாளம் கூட கண்டு கொள்ளாத அளவுக்கு மாற்றுத்திறனாளியாக ஜோடி சேர்ந்தனர்.
அதிலும் சூர்யா சின்னா கேரக்டரில், பல்லு எடுப்பாக கூன் விழுந்து பார்ப்பதற்கே வித்தியாசமாக தன்னுடைய காமெடி கலந்த நடிப்பை வெளிக்காட்டினர். இந்தப் படத்தை பார்ப்பவர்கள் பலரும் சின்னா கேரக்டரில் இருப்பது சூர்யாவா என வியக்கும் அளவுக்கு அச்சு அசல் மாற்றுத்திறனாளியாகவே முற்றிலுமாக தன்னை மாற்றி அசத்தலாக நடித்தார்.
விக்ரம்- காசி: 90களில் இருந்து இப்போது வரை சியான் விக்ரம் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய உருவத்தை அசால்டாக மாற்றியமைத்து நடிக்க கூடியவர். 2001 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் பார்வையற்ற திறமையான பாடகர் ஆக நடித்தார்.
இவர் தனது பாடல்களால் குடும்பத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவரது குடும்பத்தில் ஏற்படும் அசம்பாவிதத்தால், சாதுவாக இருந்தவர் ஆக்ரோஷமாக எப்படி மாறுகிறார் என்பதை இந்த படத்தில் பார்க்க முடியும். அதுவும் கண்ணு தெரியாதவர்கள் எப்படி தங்களது அனுதின வாழ்க்கையை ஓட்டுகின்றனர் என்பதை விக்ரம் இதில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் வெளிக்காட்டினார்.