மாமன்னன் கதையை கவுண்டமணி 2 நிமிஷ காமெடியிலேயே சொல்லிட்டாரு.. அப்போவே டஃப் கொடுத்த நக்கல் மன்னன்

Actor Koundamani: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய விவாத பொருளாக இருப்பது திரைப்படங்களில் ஜாதி அரசியலை பேசுவது சரியா இல்லை தவறா என்பதுதான். மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தற்பொழுது இது மிகப் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது. ஒரு பக்கம் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் ஜாதி உணர்ச்சியை தூண்டுவதாக நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்ட சாதியை சேர்ந்த வடிவேலு அவர் இருக்கும் கட்சியிலேயே மற்றொரு ஜாதிக்காரரான பகத் பாசிலால் எப்படி நடத்தப்படுகிறார், அதன் பின்னர் அவர் எடுக்கும் முடிவு என மாமன்னனின் திரைக்கதை அமைந்திருந்தது. இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு பற்றி பல கருத்துக்கள் இருந்து வந்த நிலையில், 90களின் காலகட்டத்தில் கவுண்டமணி நடித்த ஒரு சில காமெடி காட்சிகள் திடீரென கவனம் பெற்று இருக்கிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மேலும் இது போன்ற சாதி தீண்டாமை கதைகளை இரண்டரை மணி நேர படமாக எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி ரொம்பவும் சாதாரணமாக தன்னுடைய இரண்டு நிமிஷ காமெடி காட்சியில் பேசியிருக்கிறார். இவ்வளவு நாள் வரும் காமெடியாக பார்க்கப்பட்ட இந்த காட்சிகள், மாமன்னனுக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

ராக்காயி கோயில் என்னும் திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் முடி திருத்தும் வேலை செய்பவர்களாக நடித்திருப்பார்கள். இந்த படத்தின் ஒரு காட்சியில் விஜயகுமாரின் வீட்டிற்கு சென்று அவருக்கு முடிவெட்டி, தாடி ஷேவிங் செய்யும் பொழுது, மனோரமா விஜயகுமாருக்கு வெள்ளி கிளாசில் காப்பியும், அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு கொட்டாங்குச்சியிலும் காபி கொடுப்பார். அப்போது கவுண்டமணி நீங்கள் வெள்ளி கிளாசில் காபி குடிக்கும் பொழுது, எங்களுக்கு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் காபி கொடுக்கக் கூடாதா என கேட்டிருப்பார். இந்த காட்சி தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

அதேபோன்று ஒன்னா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி வெட்டியான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் காமெடி காட்சி பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் அவருடைய மகனை அடித்து பள்ளிக்கு இழுத்துச் சென்று கொண்டிருப்பார். அப்போது ஒருவர் உன் பையன் எல்லாம் படிக்கப் போயிட்டா வெட்டியான் வேலை யார் பார்க்கிறது என கேள்வி கேட்பார். அதற்கு கவுண்டமணி ஏன் நீங்க கொஞ்ச நாள் அந்த வேலையை பாருங்கள் என நக்கலாக பதில் சொல்லி இருப்பார்.

கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தின் காமெடி காட்சிகள் அத்தனையும் ரசிக்கும் படி இருக்கும். இதில் துணி துவைக்கும் வேலை பார்ப்பவர்களாக கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்திருப்பார்கள். விஜயகாந்த் தப்பானவர் என ஊரே சேர்ந்து பேசும்பொழுது, கவுண்டமணி அவருக்கு ஆதரவாக இனி ஊரில் இருக்கும் யார் துணியையும் நான் துவைக்க மாட்டேன் என முடிவு எடுத்து சொல்லுவார். அந்த காட்சியிலும் அதே நக்கலோடு உங்க துணியை நீங்களே துவைச்சுக்கோங்க என சொல்லி இருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →