கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காதவரா? மணிரத்தினத்தின் படம் பார்ப்பதற்கு முன் இத தெரிஞ்சுட்டு போங்க

ஆசிரியர் கல்கியின் புதினமான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்தினம் இப்போது படம் ஆக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் 1950 களில் கல்கி வார இதழில் தொடர் கதையாக வெளிவந்தது. வாரா வாரம் கதையின் சுவாரஸ்யம் கூடி போக இந்த தொடர் கதைக்கு ரசிகர்கள் அதிகம் ஆகி கொண்டே இருந்தனர். இந்த வரவேற்பை தொடர்ந்து இந்த தொடர் கதையை 5 பாகங்களாக அதாவது புதுவெள்ளம், சுழற்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகசிகரம் என புத்தகமாக வெளியானது.

பொன்னியின் செல்வனை படமாக பார்த்து விட வேண்டும் என்று அதன் ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். எம் ஜி ஆர் முதல் கமல் வரை முயற்சி செய்து முடியாமல் போயிற்று. மணிரத்தினம் சொன்னபடி பொன்னியின் செல்வன் அதன் காலத்தை அதுவே தேர்ந்தெடுத்து கொண்டது. பொன்னியின் செல்வன் அறிவிப்பு வெளியானதும் பலரும் மீண்டும் இந்த கதையை புத்தகமாக, ஆடியோவாக கேட்க தொடங்கி விட்டனர். இந்த கதையை அவ்வளவு எளிதில் படித்து விட முடியாது.

சோழர்களின் பொற்காலத்திற்கு முந்தைய காலம் தான் பொன்னியின் செல்வனின் கதைக்களம். சோழர்களின் நிலத்தை மீட்டு சோழ அரசை தலை தூக்க வைத்தவர் இரண்டாம் பராந்தக சோழன். அழகில் மன்மதன் போல் இருந்ததால் இவரை சுந்தர சோழன் என்பர். சுந்தர சோழனுக்கு மூன்று பிள்ளைகள். சுந்தர சோழன் வயது மூப்பினால் நோயுற்று பழையாறையில் தங்கி இருந்தார். அவருக்கு பின்னான முடி சூட்டு தான் கதையின் மைய கருத்து.

சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலன், இவர் அவனுடைய தாய் வழி தாத்தா மலையமானுடன் தங்கி இருந்தார். அடுத்து மகள் குந்தவை, சோழ குடும்பத்திலும், சோழ நாட்டிலும் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை இவள் தான் தீர்மானிப்பார். குந்தவையின் தோழி வானதி, ராஜ ராஜ சோழனை மணக்க வேண்டும் என்பதை தாண்டி வானத்திற்கு வாழ்வில் வேறெந்த ஆசையும் கிடையாது. சுந்தர சோழனின் கடைசி மகன் அருள் மொழி வர்மன். இவருக்கு பொன்னியின் செல்வன், ராஜ ராஜ சோழன் என்ற பெயர்களும் உண்டு. சோழ ஆட்சியை இலங்கை வரை விரிவுபடுத்தியவர்.

இவர்கள் தான் அந்த சோழ ஆட்சியில் வாழ்ந்தவர்கள். மற்றபடி நந்தினி, மந்தாகினி தேவி என்னும் ஊமை ராணி, ஆழ்வார்க்கடியான் நம்பி, மணிமேகலை, கந்தமாறன், பார்த்திபேந்திரன், பூங்குழலி, சேந்தன் அமுதன் அத்தனையும் கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக கல்கியால் சேர்க்கப்பட்ட கற்பனை கதாபாத்திரங்கள். சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலனின் இறப்பு என்பது இன்றும் விடை தெரியாத மர்மமாக தான் இருக்கிறது.

சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலனின் மரணம் மர்மம் என்பதால் அதில் சுவை கூட்டவே நந்தினியுடனான காதல், பழிவாங்க அவள் பழுவேட்டரையரை மணப்பது போன்றவை சேர்க்கப்பட்டு இருக்கும். அருள்மொழி வர்மனை ஒரு தலையாக காதலிக்கும் பூங்குழலி, வந்திய தேவனுக்காக உயிரை விடும் மணிமேகலை கல்கியின் கற்பனைகள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →