ஆஸ்க்காருக்காக ரஜினிக்கு வலைவீசிய அக்கடு தேசத்து இயக்குனர்.. சூப்பர்ஸ்டாரின் புது அவதாரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் நிலையில், தனது மகள் மற்றும் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள, லால் ஸலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அக்கடு தேச இயக்குனருடன் கூட்டணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தில் பிறந்து, பஸ் கண்டக்டராக வேலை செய்து, சென்னைக்கு வந்து பல இன்னல்களை சந்தித்து தனது ஸ்டைல், நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர்.

என்னை வாழவைக்கும் தமிழக மக்களே என்று சூப்பர்ஸ்டார் மேடைகளில் ஏறி மைக்கை பிடித்து பேச ஆரம்பிக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆர்ப்பரிக்கும். அப்படி ரஜினிகாந்த், தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது மீண்டும் தன் சொந்த மண்ணிற்கே சென்று படங்களில் நடிக்க சூப்பர்ஸ்டார் தயாராகியுள்ளார்.

கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 400 கோடி வரை உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. இது போதாது என்று ஆஸ்கார் வரை சென்று நாமினேஷன் லிஸ்டில் தேர்வானது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து காந்தாரா படத்தை மெய்சிலிர்க்க பார்த்தாக புகழ்ந்து தள்ளினார். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் வைரலான நிலையில், இருவரும் இணைந்து கூடிய விரைவில் கூட்டணி சேர அதிக வாய்ப்பு இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதை நிரூபணமாக்கும் வகையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க ரிஷப் ஷெட்டி திட்டம் தீட்டி ரஜினிகாந்திடம் பேசியுள்ளார்.

ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். 1981 ஆம் ஆண்டு கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான கர்ஜானா என்ற கன்னட திரைப்படத்தில் தான் கடைசியாக ரஜினி நடித்த நிலையில், 40 வருடங்கள் கழித்து தனது பிறந்த மண்ணுக்கே சென்று ரஜினி தற்போது நடிக்க உள்ளார். இதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்பது தான் பெரும்கேள்வியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →