அனிருத் வந்த பிறகு அழிவு பாதையை நோக்கி நகரும் திரை இசை.. அதிருப்தியில் பாடகர்கள்

Music Director Anirudh: கரகாட்டக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வாகை சந்திரசேகருக்கு ஒரு வசனம் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, வெளியூர் ஆட்டக்காரர்கள் வந்து ஆடினால், அப்போ உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என கேட்டிருப்பார். சில சமயங்களில் நிறைய நகைச்சுவை காட்சிகளில் கூட இந்த வசனம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்திய தமிழ் சினிமா இப்படி ஒரு பிரச்சனையை தான் சந்தித்து வருகிறது.

நெடுந்தூரப்பயணம், தூக்கம் இல்லாத இரவு போன்றவற்றில் நம்மை ஆட்கொண்டு இருப்பது நாம் விரும்பி கேட்கும் பாடல்களின் ப்ளே லிஸ்ட் தான். ஒரே பாடலை எத்தனையோ முறை கேட்போம், ரசிப்போம் ஆனால் அந்தப் பாடலை பாடிய பாடகர் அல்லது பாடகி இப்போதெல்லாம் ஏன் சினிமாவில் பாடுவதில்லை என்பதை நாம் அவ்வளவாக யோசித்தது இல்லை. உண்மையை சொல்லப்போனால் அவர்களுக்கு இப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆக இருந்த ஹரிஹரன், சுஜாதா, ஸ்ரீனிவாஸ், கார்த்திக், திப்பு, ஹரிணி, ஷாலினி போன்றவர்கள் எல்லாம் சமீபத்தில் எந்த ஒரு படத்திலும் பாடவில்லை. இதற்கு முக்கிய காரணம் இப்போது வந்திருக்கும் இளம் இயக்குனர்களின் ட்ரெண்ட் செட் தான். அதாவது அவர்கள் இசையமைக்கும் படங்களுக்கு அவர்களே பாடல் பாடி கொள்கிறார்கள், ஹீரோக்கள் பாடல் எழுதுகிறார்கள், அவர்கள் பங்குக்கு அவர்களும் பாடி கொள்கிறார்கள் இப்படித்தான் திரையிசை போய்க்கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை விட அதிக அளவு சம்பளம் வாங்குகிறார். அவரை அடுத்த ஏ ஆர் ரகுமான் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மேடையில் ஏறி பாராட்டுகிறார். அதே அனிருத் வேறொரு பாடலின் டியூனை காப்பி அடித்துப் போடுகிறார் என ஆதாரத்துடன் நிரூபித்தாலும் அது பெரிய சர்ச்சையாகுவது இல்லை. பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் பிரபலமாக இருந்த பாடகர்கள் யாருக்குமே வாய்ப்பு கொடுப்பதில்லை.

ரஜினி படங்களுக்கு இன்ட்ரோ பாடல் என்றால் எஸ்பிபி தான் என்பது காலம் காலமாக இருந்தது. அதை பேட்ட படத்தில் மாற்றிவிட்டார் அனிருத். அதன் பின் எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகு தர்பார் படத்தில் எஸ்பிபியை பாட வைத்தது இதற்கு மிகப்பெரிய உதாரணம். இப்படி தங்களுக்குள் ஒரு குழுவை வைத்துக்கொண்டு இளம் இயக்குனர்கள் பாட்டு அமைப்பதால் தான் நாம் 90 -இல் ரசித்த நிறைய பாடகர்கள் இப்போது வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

அதேபோன்று முன்பெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் இசை கச்சேரி நடக்கும். டிஜே கலாச்சாரம் வந்த பிறகு இந்த இசை கச்சேரி என்ற பேச்சைக்கே இடமில்லாமல் போய்விட்டது. இதனால் சினிமாவை தாண்டி கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பின்னணி பாடகர்களுக்கு கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது. நமக்கு பிடித்த எத்தனையோ பாடல்களை பாடிய பாடகர்கள் இப்போது சின்ன திரையில் இசை போட்டிகளில் நடுவர்களாக இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →