வடிவேலுவின் 5 வருட கனவை காலி செய்த இயக்குனர்.. நாய் சேகர் ரிட்டன்ஸ் முழு விமர்சனம்

மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்து இருக்கிறார். சுராஜ் இயக்கி இருக்கும் இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வடிவேலுவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதிலும் சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்களுக்கு அவர் தான் குலசாமியாக இருக்கிறார். அந்த அளவுக்கு இவருடைய வசனங்கள் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருக்கிறது. சமீபகாலமாக இவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தது அனைவருக்கும் ஒரு பெரிய குறையாகவே இருந்தது. அந்த வகையில் அவருடைய ரீ என்ட்ரியை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் வடிவேலு பூர்த்தி செய்தாரா, இல்லையா என்பதை இங்கு விரிவாக காண்போம். கதைப்படி வடிவேலுவின் அப்பாவுக்கு சித்தர் ஒருவரின் மூலம் ஒரு நாய் பரிசாக கிடைக்கிறது அந்த நாய் வீட்டிற்கு வந்தவுடன் தான் அவருக்கு இருக்கும் சகல விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக குழந்தையை இல்லாமல் இருந்த அவருக்கு வடிவேலு மகனாக பிறக்கிறார்.

அதனாலேயே அந்த நாய் வடிவேலுவின் வீட்டில் ஒரு செல்லப் பிள்ளையாக வளர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளும் ஒருவர் அந்த நாயை கடத்திச் சென்று விடுகிறார். தன்னுடைய குடும்ப ரகசியம் பற்றியும், அந்த நாய் பற்றியும் அறிந்து கொள்ளும் வடிவேலு நாயை தேடி புறப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது, வடிவேலு நாயை கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

காலம் காலமாக இது போன்ற கதைகளை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதே கதையை எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் முக்கியமாக ஆடியன்ஸின் பொறுமையை சோதிக்கும் வகையில் ஒரு கதையை இயக்குனர் படமாக கொடுத்திருக்கிறார். இக்கதையை வடிவேலு எப்படி கேட்டு ஓகே செய்தார் என்பது தான் பெரிய புதிராக இருக்கிறது. ஆடியன்ஸ்க்கு நிச்சயம் புடிக்கும் என்றும், ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து உங்களை கொண்டாடுவார்கள் என்று சொல்லி சொல்லியே இயக்குனர் வடிவேலுவை ஏமாற்றிவிட்டார் போல.

ஆனாலும் அவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்த குறையும் வைக்காமல் இப்படத்தை சரியாகவே முடித்துக் கொடுத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக இவ்வளவு வயதிலும் அவர் சிரத்தை எடுத்து நடித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனாலும் வடிவேலுவின் பழைய காமெடி வசனங்களை இப்படத்தில் பட்டி டிங்கரிங் பார்த்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்களான ஷிவானி, சிவாங்கி, ராமர், பாலா உள்ளிட்ட பல பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கின்றனர்.

ஆனாலும் அவர்கள் அனைவரும் இந்த படத்தில் ஒரு செட் ப்ராப்பர்ட்டி போல்தான் இருக்கின்றனர். மற்றபடி ஆனந்தராஜ் ஒரு சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் வடிவேலுவின் 5 வருட கனவை இயக்குனர் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற ஒரே திரைப்படத்தால் தகர்த்தெறிந்து விட்டார். இனிமேலாவது வடிவேலு கதை விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருந்தால் நல்லது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →