குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்

Maamannan Movie Vadivelu: வைகைப்புயல் வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் இவர் கம்பேக் கொடுத்தாலும் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பழைய பெயரும், புகழையும் மனதில் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வடிவேலுவுக்கு அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்ததோடு ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் தான் மிச்சமாக கிடைத்தது.

மேலும் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்ததிலிருந்து அவருடனே பயணித்த பலரும் அவரை பற்றி ரொம்பவும் மோசமாக பேட்டிகள் கொடுத்து ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தினர். வடிவேலு தன்னுடன் இருக்கும் சக நடிகர்கள் யாரையும் வளர விட மாட்டார் என்பதிலிருந்து அட்ஜஸ்ட்மென்ட் வரைக்கும் அவர் மீது புகார்கள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டன. ஆனால் இது எதற்குமே வடிவேலு எந்த பதிலும் சொல்லவில்லை.

இப்படி வடிவேலுவின் கேரியர் மொத்தமாக முடிந்து விடும் என்று நினைத்தவர்களுக்கு மிகப்பெரிய அடியாக வந்தது தான் மாமன்னன் திரைப்படம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனே வடிவேலு தான். அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவால் இப்படியும் நடிக்க முடியுமா என்று படம் பார்ப்பவர்களை அதிர வைத்து விட்டார்.

ஒவ்வொரு காட்சியிலும் மௌனமாக தன்னுடைய முகபாவனைகள் மூலமாக மிரட்டி விட்டார் வடிவேலு. மகனுக்காக அரசியலே வேண்டாம் என ஒதுங்கும் காட்சியில் நடிப்பில் பயங்கர மெச்சூரிட்டியை காட்டியிருந்தார். மேலும் இறுதிக் காட்சியில் அவர் நடந்து வந்து அந்த சபாநாயகர் இடத்தில் உட்கார்ந்து பார்ப்பவர்களை புல்லரிக்க வைப்பதோடு அவருடைய எதிரிகளுக்கும் பதில் சொல்லும் படி இருந்தது.

இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வடிவேலுவின் குரலில் வந்த ராசா கண்ணு பாடல் அத்தனை ரசிகர்களையும் கட்டி போட்டு விட்டது. தன்னுடைய குரலின் மூலம் பாடல் கேட்பவர்களை அழ வைத்துவிட்டார். ஒரு கலைஞனாக பாதி ஜெயித்த வடிவேலு, படம் ரிலீஸ் ஆன பின்பு மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

வடிவேலு இனி அவ்வளவுதான், அவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்று எண்ணியவர்களுக்கு தன்னுடைய நடிப்பால் பதில் சொல்லி இருக்கிறார் வைகைப்புயல். மாமன்னன் திரைப்படம் வெற்றி அல்லது தோல்வி என்பதை தாண்டி, ஒரு நடிகனாக ஜெயித்த வடிவேலுவிற்கு இனி சினிமாவில் அடுத்தடுத்து இதுபோன்ற கச்சிதமான கேரக்டர்கள் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →