புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

Ear Buds பயன்படுத்துவோர் இதை கவனிக்க மறக்காதீங்க.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

காதுகளில் இயர் பட்ஸ், ஹெட்போன் உபயோகிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். நமது உடலில் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானது. ஆனால், இயற்கையில் ஆரோக்கியமாக இருக்கும் உறுப்புகளை நமது வேண்டாத செயல்கள், பழக்கங்கள் மூலம் நாமே கெடுத்து விடுகிறோம். இதனால் நமக்குத்தான் பாதிப்பு என்பதை தெரியாமலே தொடர்ந்து அதன் இன்னலுக்கும் ஆளாகி வருகிறோம்.

அந்த வகையில் ஐம்புலன்களில் ஒன்றான காது முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். இதன் வழிதான் செய்திகளையும், தகவல்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் கூர்ந்து கேட்டு அறிகிறோம். ஆனால் இதைக் கவனிக்கவும், இதற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நாம் மறந்துவிடுகிறோம் என்பதுதன் உண்மை.

காது குடைவதால் ஏற்படும் பாதிப்பு

காதில் கண்டதையும் விட்டுக் குடையாதே என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் அறிவுரையை இளைஞர்கள் கேளாமல், பென்சில், பின்னூசி, வண்டி சாவி, கோழி இறகு என கிடைக்கும் எல்லாவற்றையும் விட்டு விட்டு காது வலி என்று புலம்புவர். சிலர் குடையும் போது விபரீதமாகி மருத்துவர் வரை சென்று வைத்தியம் பார்ப்பர். இப்பழக்கத்தில் இருந்து விடுபட்டால் நாம் காதினை பாதுகாக்க முடியும்.

அதேபோல், காதில் இயர் பட்ஸ் வைத்து குடைந்து அதில் உள்ள அழுக்கை எடுப்பதாக கூறி பாதிக்கப்படுகிறார்கள். இப்படிச் செய்வது சுகாதாரம் என்று நினைத்து வருகிறோம் ஆனால் இது பற்றிய தகவல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அதன்படி, நாமே விரும்பி தேடிக் கொள்ளும் நோயாக ஒடிடிஎஸ் எக்ஸ்டெர்ணா உள்ளது. இது, காதில் பட்ஸை வைத்துக் குடையும்போது, அழுக்கை நீக்குவதாக கூறி, செவி மெழுகை வெளியேற்றுவதால்தான் இந்த ஒடிடிஎஸ்-எக்ஸ்டெர்னா என்ற நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நம் காதுகளில் இருக்கும் இந்தச் செவி மெழுகு தண்ணீர், காற்று, மாசு, இறைச்சல் இவற்றில் இருந்து காதை பாதுகாக்க இயற்கையாய்ச் சுரக்கும் திரவம். இது காதிற்குள் மாசு எதுவும் போகாமல் தடுக்கும் திரவமாக இருக்கும் நிலையில், இதை நாமே இயர்பட்ஸ் மூலம் வெளியே எடுப்பது, அப்படி காதை குடைவதில் ஒரு சுகமும் அடைகிறோம். இதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

ஹெட்செட் மற்றும் இயர் பட்ஸ்

அதேபோல் காதுகளுக்கு இன்று அதிகளவில் நாம் தொலைதூர பயணம், வீடு, அலுவலகங்களில் ஹெட்போன்களையும் பயன்படுத்தி வருகிறோம். இதற்காக அதிகளவில் பணத்தையும் செலவு செய்து வருகிறோம். இப்படி ஹெட்போன்கள், இயர் பட்ஸ்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால், காது வலி உள்ளிட்டவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹெட்போன், இயர் பட்ஸ் பயன்படுத்தும்போது அதைச் சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இதனால்தான் வலி ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து இயர் பட்ஸ் யூஸ் செய்தால் காது வலி ஏற்படலாம் எனவே சுத்தமாக வைத்திருந்து, இடைவெளிவிட்டு குறைந்த சத்தத்தில் உபயோகிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News