ஏழைகளின் வலி, பாலா கட்டிப்பிடித்து கண் கலங்கிய வாழை எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Vaazhai Movie Review: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் வரிசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை உருவாகி இருக்கிறது. நாளை ரசிகர்களின் பார்வைக்கு வரும் இப்படம் தற்போது ஒட்டுமொத்த திரையுலகினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பல இயக்குனர்களும் இப்படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதில் குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும் என்பதுபோல் இயக்குனர் பாலா மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கண்கலங்கிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

அந்த அளவுக்கு அனைவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனம் மூலம் இங்கு காண்போம். மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வாழை எடுக்கப்பட்டுள்ளது.

கதை கரு

இக்கதையின் நாயகனே சிவனனைந்தன் என்ற சிறுவன் தான். இந்த கேரக்டரில் நடித்திருக்கும் பொன்வேல் அவருடைய நண்பராக வரும் ராகுல் ஆகிய இருவரும் இரண்டு தூண்களாக படத்தை தாங்கி பிடித்திருக்கின்றனர்.

1998 காலகட்டத்தில் நடக்கும் கதை இது. சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்ட நிலையில் அம்மா அக்காவுடன் வாழ்ந்து வருகிறான் சிவனனைந்தன். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தன் அக்காவுடன் சேர்ந்து வாழை காய்களை சுமக்கும் வேலையை செய்கிறான்.

அந்த ஊரே இதன் மூலம் வரும் வருமானத்தை நம்பி தான் இருக்கிறது. ஒரு நாள் சிறுவன் அம்மாவை ஏமாற்றிவிட்டு காய் சுமக்காமல் பள்ளிக்கு சென்று விடுகிறான். அப்போது அந்த ஊரில் பெரும் துயரம் நிகழ்கிறது. அதன் பிறகு நடந்தது இதயத்தை உருக்கும் படியான கிளைமாக்ஸ்.

நிறை குறைகள்

நிச்சயம் படத்தை பார்த்துவிட்டு வெளிவரும் போது அதன் தாக்கம் இருக்கும். அந்த அளவுக்கு இயக்குனர் ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஏழை மக்களின் வேதனை, வாழ்க்கை முறை, பள்ளி செல்லும் சிறுவன் மனதில் இனம் புரியாது வரும் நேசம் என ஒவ்வொன்றும் நிறைவாக இருக்கிறது. பூங்கொடி டீச்சராக வரும் நிகிலா விமல் தன் கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்துள்ளார்.

எத்தனையோ டீச்சர்களிடம் படித்திருந்தாலும் இப்போதும் ஒரு டீச்சர் பெயரை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்திருப்போம். அப்படி ஒரு டீச்சர் ஆக ரசிக்க வைத்துள்ளார் நிகிலா. அதை அடுத்து கனியாக வரும் கலையரசன், வேம்புவாக வரும் திவ்யா துரைசாமி ஆகியோரின் கேரக்டர்களும் சிறப்பு.

இதற்கு அடுத்ததாக கிராமத்து வாழ்வியலை அதிலும் 90 காலகட்டத்தை அப்படியே கண்ணும் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரை பாராட்ட வேண்டும். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் சில குறைகளும் தென்படுகிறது. குறிப்பாக பள்ளி காட்சிகள் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். ஆனால் அது எதுவும் பெரிய குறை என்று சொல்லிவிட முடியாது.

அந்த அளவுக்கு மாரி செல்வராஜ் படத்தை கொண்டு சென்றுள்ளார். அதிலும் அந்த கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒரு திடுக்கிடலான ட்விஸ்ட் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் ஆடியன்ஸ் அதை பார்த்து கதி கலங்கி போவார்கள். இப்படி மனதை ரணப்படுத்திய இந்த வாழை – சொல்ல முடியாத வலி.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

பாராட்டுகளை குவிக்கும் மாரி செல்வராஜின் வாழை

Next Story

- Advertisement -