நம்பினேன்.. உயிரே பறந்துச்சு! கஜானா தயாரிப்பாளருக்கு நடந்தது என்ன?

கஜானா திரைப்படம், மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் செயல்பட்டிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், திரைப்படத்தின் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததோடு, நம்பிக்கை வைத்த சிலர் தன்னைக் ஏமாற்றி விட்டதாக பிரபதீஸ் சாம்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நான்தான் “கஜானா” திரைப்படத்தைக் கஷ்டப்பட்டு இயக்கி, தயாரிச்சேன். ‘ஆட் வாய்ஸ் மீடியா’ உரிமையாளர் ஆதித்யா பாட்டியா என்னிடம் வந்து, “இந்தி உரிமை நிச்சயம் நாங்களே வாங்கிக்கிறோம். படம் ரிலீசாகும் நேரத்துல சௌத் இந்தியா உரிமையும் நாங்கள் வாங்கிவிடுவோம் என்ற ஆசை வார்த்தைகளில் நம்ப வச்சாங்க.

அவர்களின் வார்த்தையை நம்பி, ஏற்கனவே ஒரு பிரபல நிறுவனத்திடம் போட்டிருந்த distribution ஒப்பந்தத்தை நான் ரத்து செய்தேன். ஒப்பந்தம் ரத்து செய்ததற்கான செட்டில்மென்ட் பணமாக ரூ.85 லட்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அந்தத் தரப்பு எனக்கு ஆரம்பத்தில் கொடுத்தது வெறும் ரூ.35 லட்சம்தான்! மீதமுள்ள ரூ.50 லட்சத்தை நான் என் கையிலிருந்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதெல்லாம் நடக்க காரணமானவர் பரமசிவம்! இவர் தான் மத்தியஸ்தராக இருந்தார். இப்போது அவர்தான் சமீபத்தில் வெளியான படைத் தலைவன் படத்தை தயாரித்திருக்கிறார். என்னிடம் வாங்கின அந்த ரூ.50 லட்சத்தையும் கொண்டு தான், அந்தப் படத்தையே எடுத்திருக்கிறார்!

ஆட் வாய்ஸ் மீடியா நிறுவனம் முதல் கட்டமாக கொடுத்த தொகையைத் தவிர, மீதமுள்ள ஒரு கோடி 75 லட்சம் ரூபாயை வழங்க மறுத்துவிட்டார்கள்.

என்னை நம்பவைத்து, படத்தை பெரும் தொகைக்கு hotstar ஓடிடி உரிமையும், சாட்டிலைட் உரிமையை கலர் பிளஸ், ஸ்டார் பிளஸ் கோல்ட் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, எனக்கு தர வேண்டிய ரூ.1.75 கோடியை தாமதிக்கிறார்கள்.

எவ்வளவோ முறைகள் செய்தேன். என் ஃபோனை கூட இப்போது எடுப்பதில்லை!” என உணர்ச்சி வெடிப்புடன் கதறி அழுதுள்ளார் கஜானா திரைப்படத்தின் தயாரிப்பாளர். “இந்தப் படத்தில் நான் பத்து கோடி ரூபாயை இழந்துள்ளேன்.

நியாயம் வேண்டும். எனக்கு துணை நின்று, நியாயத்தை ஏற்படுத்திவைக்க பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், Naam Tamilar கட்சி தலைவர் சீமானும் உதவ வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு, ஒரு தீர்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால், தற்கொலை தவிர வேறு வழி இல்லை! என்று உணர்ச்சி தழும்பும் குரலில் கூறியுள்ளார்.