அசுரன் பட சிவசாமியாக மாறிய தளபதி விஜய்.. மேடையில் அசர வைத்த வசனம்

Actor Vijay: இன்று காலை முதலே விஜய் பற்றிய செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருக்கும் 234 தொகுதியில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் இன்று நலத்திட்ட உதவிகளை செய்து பரிசுகளையும் வழங்குகிறார்.

அந்த நிகழ்ச்சி தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் விஜய் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மேடையில் பேசிய பேச்சு வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய் மாணவர்கள் விஷயத்தில் இப்படி அதிரடியாக இறங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் அரசியல் வருகைக்காகவே இப்படி நடந்து கொள்வதாக பேசப்பட்டது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சொல்லும் வகையில் விஜய் பேசி இருப்பது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி எப்படி உருவானது என்பதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அதன்படி அசுரன் படத்தில் தனுஷ் பேசும் அந்த ஒரு டயலாக் தான் இப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவசாமி என்ற கேரக்டராகவே வாழ்ந்து தேசிய விருதையும் தட்டிச் சென்றார் தனுஷ். அந்த படத்தின் ஒரு காட்சியில் அவர் தன் மகனிடம் உருக்கமாக ஒரு விஷயத்தை கூறுவார். அதாவது நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க. பணம் இருந்தா புடுங்கிப்பாங்க, ஆனால் படிப்பு இருந்தா அதை மட்டும் எடுக்கவே முடியாது.

அதனால நல்லா படிச்சு அதிகாரத்தில் உட்காரனும் என்று சொல்வார். அந்த டயலாக்கை மேடையில் பேசிய விஜய் இதுதான் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தூண்டியது எனவும் குறிப்பிட்டு இருந்தார். அப்போது மாணவர்கள் அனைவரும் விழா மேடையே அதிரும் அளவுக்கு கரவொலியை எழுப்பி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் பேசிய விஜய் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குரல் இருக்கும் அதை கேட்டு முன்னேறுங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார். அவருடைய இந்த பேச்சு மாணவர்களை மட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது.