ஜி-யை அலற விடும் தமிழன்.. ஒடிசா முதல்வரின் செல்லப்பிள்ளை, யார் இந்த விகே பாண்டியன்.?

V.K.Pandian: ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மற்றும் பிஜேபி இரண்டிற்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது.

இதற்கான பிரச்சாரங்களில் தலைவர்கள் தீவிரமாக இருக்கும் நிலையில் அமித்ஷா ஒரு தமிழன் ஒடிசா மாநிலத்தை ஆளக்கூடாது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பது ஒரு தமிழனான விகே பாண்டியனை தான்.

ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்கின் செல்லப்பிள்ளையான இவர் அவருடைய அரசியல் வாரிசாக வருவதற்கும் தற்போது சாத்திய கூறுகள் இருக்கின்றன. இப்படி ஆளும் கட்சியை அலறவிடும் இவர் யார் என்பதை இங்கு காண்போம்.

முதல்வரின் செல்லப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் பள்ளி கல்லூரி படிப்பை தமிழகத்தில் தான் முடித்தார். அதை அடுத்து 2000ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். தொடர்ந்து ஒடிசா கேடராக பணியை தொடங்கிய இவர் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளார்.

அதில் கஞ்சம் தொகுதியில் ஆட்சியராக இருந்தபோது 100 நாள் நலத்திட்ட பணியாளர்களின் ஊதியத்தை வங்கி கணக்கில் நேரடியாக போடும் வசதியை செய்தார். இதைத்தான் பின்னாளில் மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது.

இதனால் முதல்வர் நவீன் பட்நாயக் மனதிலும் இவர் இடம் பிடித்தார். அதை அடுத்து முதல்வரின் தனி செயலாளராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு ஒடிசா மாநிலத்தின் நிர்வாக மாற்றங்களுக்கும் இவர் ஒரு காரண கர்த்தாவாக மாறினார்.

அது இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என்பதையும் மறுக்க இயலாது. இப்படி ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல விஷயங்களை இவர் செய்து அனைவரின் நன்மதிப்பை பெற்றார். அதையடுத்து 2014 மற்றும் 2019 என அடுத்தடுத்து பிஜு ஜனதா தள ஆட்சி அமைவதற்கும் இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

ஒடிசாவை ஆளப்போகும் தமிழன்

இதனாலேயே கட்சி தொடர்பாக இவருடைய ஆலோசனைகளை முதல்வர் பெற ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து கடந்த வருடம் தன்னுடைய ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த இவர் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

உடனே அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. இப்படியாக முதல்வரின் நம்பிக்கை பாத்திரமாக இருக்கும் இவர் எப்படி ஒடிசாவை ஆள முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம்.

முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தற்போது 77 வயதாகிறது. அவருடைய நினைவுத்திறன் குறைந்து வருவதால் அவர் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் பிஜு ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் நிலையில் முதல்வரின் வாரிசாக விகே பாண்டியன் தான் அந்த பொறுப்பிற்கு வருவார் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. இதுவே அமித்ஷாவின் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

Next Story

- Advertisement -