Kathar Basha Endra Muthuramalingam Review- அல்லாவும் அய்யனாரும் ஒன்னுதான்.. காதர் பாட்ஷா தேறுமா படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் இன்று உலகெங்கும் 700-க்கும் மேலான திரைகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் திரைப்படம் தான் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தின் திரை விமர்சனத்தை தற்போது பார்ப்போம். பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் நடக்கும் துரோகமும் சண்டையும் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

சொந்தம் விட்டுப் போக கூடாது என திருமணம் செய்து கொண்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழ்நிலையின் காரணமாக பல கொடுமைகளால் இறந்து போக, அண்ணனின் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் கதாநாயகி சித்தி இத்னானி. இவருடைய கதாபாத்திரம் தமிழ்ச்செல்வி. இவரிடம் இருக்கும் சொத்துக்காக ஆசைப்பட்டு மருமகளாக தங்கள் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சொந்த பந்தத்தினர் முயற்சிக்கின்றனர். இதற்கு சம்மதிக்காத அவர் மதுரை சிறையில் இருக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்பவரை சந்திக்க செல்கிறார்.

யார் இந்த காதர் பாட்ஷா? அவருக்கும் தமிழ் செல்விக்கும் என்ன தொடர்பு? எதற்காக தமிழ்ச்செல்வி அவரை சந்திக்க செல்கிறார்? என்ற கேள்விக்கு பதில் தான் திரைக்கதை. இந்த படத்தில் முத்தையா தனக்கென்றே இருக்கும் தனி பாணியில் படத்தை கையாண்டு சமகால அரசியலை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த படத்தில் சாதியை இரண்டாவது லேயராக வைத்து இந்து- முஸ்லிம் இடையேயான மத ஒற்றுமையை முதன்மைப்படுத்தி பேச முயற்சித்துள்ளார். அல்லாவும் அய்யனாரும் ஒன்றுதான் என கதாநாயகன் சாதியை விட்டுவிட்டு மதத்தை ஒன்று சேர்க்க பார்த்திருக்கிறார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட கேரக்டரை வைத்திருக்கும் முத்தையா யாருக்கு யார் அப்பா? யாருக்கு யார் அண்ணன்? இவருக்கு அவர் யார்? இப்படி நான்கைந்து இடியாப்பங்களை ஒன்றாக பின்னி பிணைந்து இருக்கும் உறவுமுறைகளை நினைவில் வைப்பது பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. படத்தில் இடம்பெற்ற எமோஷன் காட்சிகள் சுத்தமாகவே கனெக்ட் ஆகவில்லை தொடர் வண்டி போல் தொடர்ந்து கொண்டே போகும் கதைக்களமும் ஆர்யாவுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப் காட்சியும், காரணமே இல்லாமல் இடையில் வரும் பாட்டு, அதை தவிர சண்டைகளை தின்று கொழுத்த படத்தின் முதல் பாதி பார்ப்பதற்கு செம போர்.

கருப்பு வேட்டி சட்டையில் ஒரே காஸ்டியூமில் படம் முழுக்க வந்த ஆர்யா, படத்தின் பட்ஜெட்டை குறைத்து விட்டார். இந்த படத்தின் மூலம் தான் முதல் முதலாக கிராமத்து கெட்டப்பில் திரையில் தோன்றிய ஆர்யா எமோஷனலில் கண்ணீர் சிந்தும் காட்சிகள் தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போலவே சுத்தமாகவே ஒட்டவில்லை. மேலும் தமிழ்ச்செல்வியாக வந்த சித்தி இத்னானியை கிராமத்து பெண்ணாக ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்ச நேரம் எடுத்தது. மொத்தத்தில் முத்தையா சினிமாடிக் யூனிவர்சில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படமும் இணைந்து விட்டது.

வழக்கமாக படம் ரிலீஸ் ஆனால் சோசியல் மீடியாவில் பிரபலமான திரை விமர்சகர்கள் அறக்க பறக்க கருத்துக்களை பதிவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு மட்டும் புரோமோஷன் பண்ணுபவர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்களே தவிர மற்றவர்கள் எல்லாம் சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லை மற்றும் கலவையான விமர்சனங்களை பெற்றதை வைத்து பார்க்கும்போது படம் அடுத்தடுத்த நாட்களில் ஓடுவது சந்தேகம் தான்.

சீரியலை பார்க்கும் குடும்ப ஆடியன்ஸ்க்கு காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் பிடிக்கும். அவர்களது வருகையால் காதர் பாட்ஷாவின் தலை தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் இடம் பெற்ற கறி குழம்பு வாசம் என்ற பாடல் திரையரங்கில் கமகமவென மணக்கிறது. படம் ஹிட் ஆகுதோ இல்லையோ இந்த பாடல் நிச்சயம் ஹிட் ஆகும். மொத்தத்தில் ஒரு தடவை பார்க்கக்கூடிய படம் தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்- 2.25/5.