பெரிய நடிகர்களுக்கு கூட வராத யோசனை.. சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா

Vijay TV Bala: பொது மக்களிடையே கொஞ்சம் பேமஸ் ஆகி விட்டாலும் உடனே ஒரு யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்கள் போட்டு விளம்பரங்கள் செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் விஜய் டிவி பாலா செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். பெரிய நடிகர்கள் கூட இது போன்ற சேவைகளை ஏன் செய்யவில்லை என்று மக்களிடையே கேள்வி எழுந்திருக்கிறது.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர்தான் பாலா. இவரை வெட்டுக்கிளி பாலா என்று கூட கலாய்ப்பது உண்டு. குக் வித் கோமாளி சமையல் போட்டியின் மூலம் இவருக்கு அதிக ரீச் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் தான் பாலா ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு செய்யும் உதவிகள் பற்றி வெளியில் தெரிந்தது.

மிகப்பெரிய நட்சத்திரமாக இல்லாத போதும், கோடிகளில் சம்பளம் வாங்காத போதும் பாலா இப்படி தனது கிடைக்கும் சின்ன தொகையில் கூட சேவை செய்து வந்தது பலரது பாராட்டையும் பெற வைத்தது. சில மாதங்களுக்கு முன்பு இவர் அறந்தாங்கி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 20 நாட்களுக்கு முன்பு ஈரோடு, சத்தியமங்கலம் மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பாலா, இதே போன்று மலை கிராம மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வேன் என்று சொல்லி இருந்தார். இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழகனை கிராமத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். மேலும் இந்த ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் இயங்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மட்டும் இல்லாமல் 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி மற்றும் கடப்பாறை போன்ற வேளாண் உபகரணங்களையும் தன் சொந்த செலவில் வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பாலா தன் மீது எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த வருடத்திற்குள் பத்து இலவச ஆம்புலன்ஸ்களை கொடுப்பதுதான் என்னுடைய குறிக்கோள் என்றும் சொல்லி இருக்கிறார்.

மக்களுக்கு அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் மருத்துவ வசதி. அந்த மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும் வகையில் தற்போது பாலா உதவி செய்திருக்கிறார். நிறைய பிரபலங்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக சம்பாதித்து கொண்டிருக்கும் போது, எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் பொதுநலமாக இருக்கும் பாலா நிஜ வாழ்வில் ஹீரோ ஆகிவிட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →