சினிமா செய்திகள்

மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

By · 20 ஏப் 2023 · Updated 17 ஏப் 2025
rajini-maruthanayagam

ஒரு சில திரைப்படங்கள் வெளிவரும் முன்பே மக்களின் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே மக்களிடையே மிகுந்த ஆவலை உண்டாக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், ரஜினி கூட்டணியில் எடுக்கப்பட இருந்த திரைப்படம் தான் ராணா.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் அப்படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற அளவிற்கு மக்களிடையே ஒரு சந்தேகமும் எழ ஆரம்பித்து விட்டது. பொதுவாக படத்தின் கதை அம்சம் கொண்டே அதன் வெற்றியை நாம் யூகிக்க முடியும்.

பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது என்பது சுலபமான வேலை அல்ல. ஹீரோவின் இமேஜுக்கேற்ப பட கதையை அமைக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த படம் மக்களின் பேராதரவை பெறும். அதனாலேயே இப்படத்தின் கதையை கே எஸ் ரவிக்குமார் ரஜினிக்காக பார்த்து பார்த்து உருவாக்கி இருந்தார். இதற்கான கதையை ரஜினியிடம் கூறிய போது அவருக்கும் இந்த கதை பிடித்து போக இப்படத்தில் தான் நடிப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் ராணா பட முதல் நாள் ஷூட்டிங்கில் ரஜினிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அப்படப்பிடிப்பினை ஒத்தி வைத்தார் கே ஸ் ரவிக்குமார். மேலும் அதன்பின் ரஜினியும் தன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அதனால் பல எதிர்பார்ப்புகளோடு பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்ற கற்பனையில் இருந்த கே ஸ் ரவிக்குமாருக்கு அது சோதனையாக அமைந்தது.

இப்படியே பாதியிலேயே நின்று போன அந்த படம் பற்றிய ஒரு விஷயத்தை இயக்குனர் தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த படம் தான் தனக்கு கடைசி படம் என்று ரஜினி முடிவு செய்திருந்தாராம். அதனாலேயே அப்படம் பூஜை போடும் சமயத்தில் தனக்கு நெருக்கமான அத்தனை பேரையும் அவர் அழைத்திருக்கிறார். இப்படியெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் நின்று போனது இன்று வரை ரஜினிக்கும் ஒரு வருத்தமாக தான் இருக்கிறது.

அதனாலேயே கே எஸ் ரவிக்குமாரை சமீபத்தில் சந்தித்தபோது அந்த கதை குறித்து அவர் விவாதித்திருக்கிறார். இதனால் இப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்ற ஒரு ஆர்வம் எழுந்திருக்கிறது. அதிலும் தீபிகா படுகோன் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோன்று தான் மருதநாயகம் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியிலேயே நின்று போனது குறிப்பிட்டதக்கது.