குட்டி பகை, ஆடு உறவா?.. படத்தின் லாபத்திற்காக ரசிகர்களை உசுப்பேத்திவிடும் ஹீரோக்கள்

Rajinikanth – Thalapathy Vijay: பொதுவாக ஒரு ஹீரோவின் பட வெற்றி என்பது, அவர்களுடைய சம்பளத்திற்கும், அடுத்த படத்தின் வாய்ப்பிற்கும் அடித்தளமாக இருக்கிறது. மேலும் தங்களுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்வதற்காக படத்தின் வசூலை மையப்படுத்தி ஹீரோக்கள் அதற்கான பல திட்டங்களை போடுகிறார்கள். படத்தின் வெற்றிக்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் இதற்காகத்தான்.

முன்னணி ஹீரோக்கள் தங்கள் ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள், எதுபோன்ற வசனங்களுக்கும், காட்சிகளுக்கும் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் இருக்கும் என புரிந்து கொண்டு படத்தில் அதற்காக கடுமையாக வேலை செய்வார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தி வெற்றி பெறுவது ஒரு டெக்னிக் என்றால், ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு வெற்றி பார்ப்பது சமீப காலமாக புதிய டெக்னிக்காக மாறி வருகிறது.

சமீப காலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா ரொம்பவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு விட்டது. இதற்கு காரணம் அந்த நடிகர்கள் மேடை ஏறி பேசும் ஒரு சில பவரான வசனங்களுக்காகவும், அந்த நடிகர் தனக்கு வேண்டாதவர் என யாரை கை காட்டுகிறார் என தெரிந்து கொள்வதற்காகவும் பிரபலங்களில் இருந்து, ரசிகர்கள் வரை காத்து கிடக்கிறார்கள்.

அதற்கு ஏற்றது போல் நடிகர்களும் மேடை ஏறியதும் தங்களால் முடிந்தவரை வீர வசனங்களை பேசி, ரசிகர்களை பயங்கரமாக உசுப்பேத்தி விடுகிறார்கள். ரசிகர்களும் தங்களுடைய தலைவனுக்கு இந்த நடிகர் தான் எதிரி, அவர் முன்னால் நம்முடைய தலைவன் ஜெயித்தே ஆக வேண்டும் என ஒவ்வொரு படத்தையும் வெற்றி பெற வைப்பதற்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.

சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடல் ரிலீஸ் ஆன சமயமாக இருக்கட்டும் அல்லது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவாக இருக்கட்டும், ரஜினி முழுக்க முழுக்க விஜய்யை தான் எதிர்க்கிறார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இந்த நடிகர்கள் எல்லோரும் தங்களுக்குள் சண்டை தான் போட்டுக் கொள்கிறார்களா என்று பார்த்தால் கிடையாது.

ஒருவேளை இதன் பிறகு ரஜினி மற்றும் விஜய் ஒரே மேடையில் சந்திக்க நேரிட்டால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, ஆரத் தழுவிக் கொள்வார்கள். ஆனால் அவர்களுடைய ரசிகர்களோ யார் பெரியவர்கள் என சமூக வலைத்தளங்களில் சண்டை இட்டு தங்களுடைய நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆடு பகை குட்டி உறவு என்ற பழமொழி பொதுவாக சொல்லப்படுவது உண்டு. வெற்றிக்காக இந்த நடிகர்கள் உபயோகிக்கும் டெக்னிக் குட்டிப் பகை, ஆடு உறவு என்பதைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →