குட்டி ஸ்டோரி சொல்லி அசத்திய தளபதி விஜய்.. வியந்து பார்த்த நெல்சன்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. எப்போதும் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும். அதில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த முறை சில காரணங்களால் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் விஜய் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் பேட்டி அளித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் நெல்சன் திலீப்குமார் விஜய்யை பேட்டி எடுத்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் முடிவில் நெல்சன் விஜய்யிடம் ஒரு குட்டி கதை சொல்லுங்கள் எனக் கேட்டிருந்தார். இப்போது ஸ்டாக் இல்லை என ஆரம்பத்தில் மறுத்த விஜய் பின்பு, ரசிகர்களுக்காக ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார். புல்லாங்குழல் மற்றும் கால்பந்து இரண்டையும் ஒப்பிட்டு ஒரு கதை கூறினார்.

கால்பந்து புல்லாங்குழலை பார்த்து கேட்டதாம், எனக்குள்ளும் காற்று தான் இருக்கிறது உனக்குள்ளும் காற்று தான் இருக்கிறது. ஆனால், என்னை காலில் போட்டு மிதித்தார்கள், ஆனால் உன்னை உதட்டில் வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். அது ஏன் என கால்பந்து கேட்டுள்ளது.

அதற்கு புல்லாங்குழல் உன்னிடம் இருக்கும் காற்றை உனக்குள்ளேயே வைத்திருக்கிறாய், யாருக்கும் நீ அதை தருவதில்லை, அதனால் தான் உன்னை மிதிக்கிறார்கள். ஆனால் நான் என்னுள் இருக்கும் காற்றை இன்னிசையாக வெளியில் கொடுக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் முத்தமிடுகிறார்கள் என புல்லாங்குழல் சொன்னதாம்.

ஆரம்பத்தில் விஜய் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டு ரசிகர்களுக்கு இப்படி ஒரு தத்துவத்தை சொன்னது அனைவரையும் பிரமிக்கச் செய்தது. மேலும் நெல்சனின் பல கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் சாதுர்யமாக பதில் அளித்து இருந்தார் விஜய்.