சூப்பர்ஹிட்டான 20 படங்கள்.. நண்பன் மறைவுக்குப்பின் அந்த மாதிரி படங்களில் நடிக்க வெறுத்த கமல்

உலகநாயகன் கமலஹாசன் திரையில் நடிக்க வந்த 55 வருடங்களில் பல வித்யாசமான கதைகளில் நடித்துள்ளார். கமலின் ரொமான்ஸ் நடிப்பிற்கு ஒருபக்கம் ரசிகர்கள் இருந்தாலும், அவரின் காமெடி நடிப்பிற்கு தனி ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட கமலஹாசனின் காமெடி நிறைந்த ஆக்ஷன், கமர்ஷியல் படங்களின் வெற்றிகள் ஏராளம்.

இவரின் காமெடி படங்களுக்கு வசனங்கள் மிகவும் வித்தியாசமாகவும்,புதுமையாகவும் இருக்கும். உதாரணமாக முன்னாடி,பின்னாடி, கண்ணாடி என பஞ்சதந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்று வரை சிரிப்பலையை ஏற்படுத்தும். இது போன்று கமல் பேசும் காமெடி வசனங்கள் நிறைந்த திரைப்படங்கள் பல உண்டு.

அதில் முக்கியமாக அவ்வை ஷண்முகி, பம்மல்.கே.சம்மந்தம், சதி லீலாவதி,தெனாலி, உள்ளிட்ட திரைப்படங்கள் முழுக்க,முழுக்க காமெடியாகவே இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட திரைப்படங்களை தற்போது கமலின் நடிப்பில் பார்க்க முடியாமல் உள்ளது. அதற்கு காரணம் கமலின் நெருங்கிய நண்பரின் மறைவு தான் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கமலஹாசனின் நண்பரும் நடிகரும்,வசனகர்த்தாவுமாகிய கிரேஸி மோகன் அவர்கள் 80 காலக்கட்டத்திலிருந்து பல படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார். மேலும் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.அதிலும் முக்கியமாக கமலின் 20க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் இணைந்து நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

கிரேஸி மோகன் 1989 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் நகைச்சுவை வசனங்களை எழுதி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்கவைத்தார். தொடர்ந்து கமலின் 12 படங்களுக்கு காமெடி வசனங்களை எழுதிய இவர் கடைசியாக கமலின் மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். அதன்பின் 2010 க்கு பின் கமல் நடித்த திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவையை நம்மால் பார்க்கமுடியவில்லை என்பதே உண்மை.

கிரேஸி மோகன் ஒருமுறை அளித்த பேட்டியில், ஆணின் வெற்றிக்கு பின், பெண் தான் உள்ளனர் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எனது வெற்றிக்கு பின் கமலஹாசன் தான் உள்ளார் என நெகிழ்ந்து பேசினார். கடந்த 2019ஆம் ஆண்டு இதய நோயால் உயிரிழந்த கிரேஸி மோகனின் மறைவு, கமலுக்கு மட்டுமில்லை திரையுலகுக்கே மாபெரும் இழப்பாக உள்ளது என்பதே உண்மை.