சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு நடிக்க சென்றவர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலங்களில் காமெடியன், இரண்டாவது நாயகன் என்று இருந்தவர் மனம் கொத்தி பறவை படம் மூலம் தனி ஹீரோ ஆனார். அதன் பிறகு எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று அவர் நடித்த அனைத்தும் ஹிட்.
வெற்றிமேல் வெற்றி வரும்போது நம்மாட்களுக்கு பக்குவம் வருவதில்லை. அதற்கு சிவகார்த்திகேயனும் விதிவிலக்கு அல்ல. சமீபமாக அவர் நடித்த ஹீரோ, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் ஆகிய படங்கள் மண்ணை கவ்வின. அதிலும் அவர் சீமராஜா உட்பட சில படங்களின் மறைமுக தயாரிப்பாளராக இருந்தார். அப்போது ஏற்பட்ட நஷ்டம் அவரை இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் பிறகு அதிகாரபூர்வமாக தனது சொந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிக்க ஆரமித்தார். உதாரணமாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் போன்ற படங்களை சொல்லலாம். இதில் கனா மட்டுமே வெற்றிபெற்றது. பின்னர் சுதாரித்துக்கொண்ட சிவகார்த்திகேயன், தான் நடிக்கும் படங்களை பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்க ஆரமித்தார். அப்படிதான் டான், டாக்டர் படங்களில் இவரும் ஒரு தயாரிப்பாளராக கைகோர்த்தார். அத்திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அடுத்த இரண்டு படங்களான அயலான், மாவீரன் படங்களை மிகவும் நம்பி இருக்கிறார். இதில் ஒன்று சொதப்பினாலும் பல படிகள் பின்னோக்கி செல்ல வேண்டியது இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதனால் கதை தேர்வு, திரைக்கதை, காட்சிகள் எடுப்பது என்று அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இது அதிகமாகிவிட்டது.
ஆம் மாவீரன் திரைப்படத்தின் காட்சிகளை அவர் மாற்றச்சொல்ல இயக்குனருக்கும் இவருக்கும் இடையே முட்டிக்கொண்டது. பல நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்தது. தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. ஆனாலும் தயாரிப்பாளரிடம் அவருடைய நடிக்காத நாட்களையும் சேர்த்துக்கொண்டு வசூல் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள்.
மறுபக்கம் அயலான் படத்தின் காட்சிகளை பார்த்தவருக்கு அவ்வளவு திருப்தி இல்லை என்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அங்கும் மனக்கசப்புகள் இருக்கிறது. ஆனாலும் படம் முடிந்து விட்ட காரணத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். எது எப்படியோ கதாநாயகனும், இயக்குனரும் சண்டை போட்டால், பாதிக்கப்படுவது என்னமோ தயாரிப்பாளர் தான்.