கமல் இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அடுத்ததாக அவர் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பட தயாரிப்பு, இளம் இயக்குனர்களிடம் கதை கேட்பது என அவர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க அவர் தன் கட்சி வேலைகளிலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு இரட்டை சவாரி செய்து வரும் கமல் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதில் அவர் பல விஷயங்களை குறித்தும் பேசினார். ஆனால் அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அதாவது 10 வருடங்களுக்கு முன்பு கமல் தயாரித்து, இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது.
தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான அந்த திரைப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி தான் திரைக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த பிரச்சனையால் கமல் நாட்டை விட்டு செல்கிறேன் என்று கூட பரபரப்பாக பேட்டி கொடுத்தார். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தால் கமல் மனதளவில் நொந்து போயிருந்தாலும் இப்படம் வெளியாகி 220 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அது குறித்து பேசிய கமல்ஹாசன் நான் விஸ்வரூபம் படம் எடுத்தபோது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதி எனக்கு போன் செய்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அதேபோன்று இப்போது இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலினும் எந்த உதவி என்றாலும் என்னை தயங்காமல் கேளுங்கள் நான் இருக்கிறேன் என்று கூறியதாக கமல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக தனக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
தற்போது அவர் பேசியிருக்கும் இந்த கருத்து அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது. மேலும் இப்போது திமுக கூட்டணியில் போராடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் உட்பட பல கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கமலின் பிரச்சாரம் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.