சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் வராத பிரபலம்.. கமலின் அனுமதிக்காக காத்திருந்த ரஜினி

Kamal Haasan – Rajinikanth: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சமகாலத்து போட்டியாளர்களாக இருந்தாலும், தங்களுக்குள் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேசிப் பழகக் கூடியவர்கள். மேலும் ஒருவரின் படங்களை ஒருவர் பார்த்து மனதார பாராட்டக்கூடியவர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் ரொம்பவும் வெளிப்படையாக கமலின் இந்த படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்டேன், இந்த படத்தில் கமல் நடித்ததை போல் என்னால் நடிக்க முடியாது என்று கூட பேசி இருக்கிறார்.

அப்படி கமலஹாசன் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு, ரொம்பவும் பிடித்து போன ரஜினிகாந்த், அந்த படத்தில் பணி புரிந்த ஒரு பிரபலத்துடன் அவரும் படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் அந்த பிரபலத்தை அணுகி இருக்கலாம். ஆனால் அவரே நேரடியாக போன் செய்து தன்னுடன் படம் பண்ணும்படி பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்தவர்தான் கிரேசி மோகன். சினிமாவை தாண்டி மேடை நாடகங்களிலும் புகழ்பெற்றவர். ஒரு படம் முழுக்க நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு வசனம் எழுத வேண்டும் என்றால் அது இவரால் மட்டும் தான் முடியும். அது போன்று ஒரு காட்சியை பார்க்கும் பொழுதே இது கிரேசி மோகன் இன் வசனமாகத்தான் இருக்கும் என்று யோகிக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்களுடன் ஒன்றி போனவர்.

கிரேசி மோகன் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்தது உலக நாயகன் கமலஹாசன் தான். அவருடைய வசனத்தில் கமலஹாசனின், அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இதில் அவ்வை சண்முகி படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கு கிரேசி மோகன் வசனங்கள் மீது மிகப்பெரிய ஈர்ப்பு வந்திருக்கிறது.

உடனே ரஜினி, கிரேசி மோகனுக்கு போன் செய்து பாராட்டியதோடு, என்னுடைய படத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் கிரேசி மோகன் நான் இதுவரை 10,15 படங்களுக்கு மேல் கமலிடம் பணியாற்றி விட்டேன். தற்போது அவரிடம் கேட்காமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் நாளை கமலிடம் கேட்டுவிட்டு உங்களுக்கு பதில் சொல்லுகிறேன் என்று சொன்னாராம். இதை ரஜினிக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது.

ரஜினி நினைத்திருந்தால் அவர் சொன்ன பதிலுக்கு அவருடன் படம் பண்ண வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார் அடுத்தநாள் கிரேசி மோகன் கமலின் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே கமலிடம் அனுமதி கேட்டு விட்டாராம். கமலும் கிரேசி மோகனை பார்த்ததும் ரஜினிக்கு படம் பண்ண இருக்கிறீர்களாமே, வாழ்த்துக்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம். இது இவர்கள் இருவரது பெருந்தன்மையையும், கிரேசி மோகன் கமல் மீது வைத்திருக்கும் மரியாதையையும் தான் காட்டுகிறது. பின்னர் 1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதினார்.