’தோற்ற அரசியல்வாதி என்று என்னைத்தான் கூறுகிறேன்’ – கமல்ஹாசன் பேச்சு… முட்டுக் கொடுக்கும் தொண்டர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னைத் தோற்ற அரசியல்வாதி என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா, மவுரியா, சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டத்தின் போது மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘’ நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல, நமக்காக அல்ல; நாளைக்காக என்று உருக்கமுடன் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

’’வெள்ளிக்கிழமை சினிமா ஓடலீனா நீங்கள் வேணாங்க என்பார்கள்; ஆனால் மக்கள் அப்படியல்ல. தோற்றால்கூட அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.தோற்ற அரசியல்வாதி என்று என்னைத்தான் கூறுகிறேன். தோற்பது ஒரு நிலையான தன்மை கிடையாது. ஒரு தமிழன் பிரதமராகப் பதவியேற்பதற்கு நாட்டைத் தயார்படுத்த வேண்டும்! ’’என்று கூறினார்.

மேலும், ’’ஒரே நாடு ஒரே தேர்தல் என்றெல்லாம் சொல்வது எவ்வளவு ஆபத்தான பேச்சு என்பதை உங்களுக்குப் புரியவைக்க பூதாகரமாக பேசவேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும்!

ஏனென்றால் அந்த தவற்றைச்செய்து பார்த்துவிட்டது இந்த உலகம். அதைச் செய்து பார்த்து தான் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து , அந்த வடுக்கள் ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் பல இடங்களிலும் அந்த வடுக்கள் உள்ளது.இந்தியாவுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து. நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வைத்திருந்தால் இன்று இந்தியாவின் கதி என்ன?

அப்படியிருந்தால் டிக்கேட்டர்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருந்திருப்போம். இந்த மைக்கில் பேச முடியாது. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கனும் ! அதைச் பரிசோதனையாக செய்து பார்க்க வேண்டியதுதானே! டிராஃபிக்கில் ஏன் ஒரே மாதிரி லைட் இல்லை; அது யோசிப்பதற்கு டைம் கொடுக்க வேண்டும்! அந்த யோசிக்கும் நேரத்தை வாக்காளனுக்குக் கொடுக்க வேண்டும்! ஆட்சியாளனுக்கும் கொடுக்க வேண்டும்!

அப்போதுத்தான் ஐந்து வருடத்தில் இதைச் செய்யவேண்டும். அதைச் செய்யாமல்விட்டால், வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும்! இப்போது, அப்போது, இனி வரப்போகிறவர்களுக்கும் சொல்கிறேன்….இது யாருக்கும் சவால் கிடையாது…அரசியல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ஆசை! இது நிரந்தரமில்லாமல் அசவுகரியத்திற்கு ஆளாகும் வகையில் இப்பீடம் மாற வேண்டும்!ஐந்து வருடத்திற்கொருமுறை பூகம்பத்திற்கு ஆளாக வேண்டும்’’என்று வழக்கம் போலவே அவரது ஸ்டைலில் பேசினார்.

இந்த நிலையில், ’தன்னையே ஒரு கட்சித் தலைவர் தோற்ற அரசியல்வாதி’ என்று கூற கமல்ஹாசனால் மட்டும் முடியும் என்று அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

Trending News

- Advertisement -spot_img