பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் கவின் நடித்து இன்று வெளியான திரைப்படம் தான் டாடா. இந்த படத்தை கணேஷ் கே இயக்கியுள்ளார். டாடா படத்தில் அபர்ணாதாஸ், வி டிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். மேலும் நடிகர் கவின் நடித்த டாடா திரைப்படம் தமிழகமெங்கும் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ட்விட்டர் விமர்சனம், இன்ஸ்ட்டாகிராம் விமர்சனம் என்பதை எல்லாம் தாண்டி தமிழக ரசிகர்கள் எதிர்பார்க்கும் விமர்சனம் என்றால் அது பிரபல யூட்யூப் தொகுப்பாளர் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் தான். பீல் குட் மூவி இதுவரை யாரும் சொல்லாத கதை என்று அங்கங்கே விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்க ப்ளூ சட்டை மாறனோ இந்த படத்தின் கதையை மொத்தமாக காலி செய்து விட்டார்.
கல்லூரி பருவத்தில் காதலிக்கும் கவின் மற்றும் அபர்ணாதாஸ் ஒரு கட்டத்தில் மேலும் தங்களுடைய காதலை நெருக்கமாக்க திருமணத்திற்கு முன்பே அபர்ணா கர்ப்பம் ஆகிறார். கருவை கலைத்து விட கவின் சொல்ல முடியவே முடியாது என்று சொல்லும் அபர்ணாதாஸ் வீட்டை விட்டு வெளியேறி கவின் உடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அப்படி உறுதியாக இருக்கும் அபர்ணா கடைசியில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு கவினை பிரிகிறார். கவின் அந்த குழந்தையை வளர்க்கிறார். கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் டாடா படத்தின் கதை.
இந்த படத்தின் கதை இதுவரையில் யாருமே சொல்லாத கதை என்று அங்கங்கே விமர்சனங்கள் இருந்தாலும் ப்ளூ சட்டை மாறன், டாடா படத்தின் கதை கமலஹாசன் திரையுலகில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் கதை என்றும் அதை இயக்குனர் கணேஷ் கே அப்படியே காப்பி அடித்து திரைக்கதை எழுதி இருக்கிறார் என்றும் விமர்சித்திருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் ஜெமினிகணேசனுக்கும் சாவித்திரிக்கும் காதல் மலரும். இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கும் சாவித்திரி இடம் அந்த குழந்தை இறந்து விட்டதாக பொய் சொல்லி விடுவார்கள். ஜெமினி கணேசன் வெளிநாடு சென்று இருப்பதால் அவருக்கு குழந்தை பற்றி எதுவும் தெரியாது பின்னர் விஷயம் தெரிந்து கொண்ட ஜெமினி கணேசன் தன்னுடைய மகனான கமலஹாசனை தன்னுடனே வளர்த்து வருவார்.
டாடா திரைப்படத்தின் கதை இந்த கதையோடு ஒட்டி இருப்பதாகத்தான் ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருக்கிறார். மேலும் இந்த கதையை பார்க்கும் பொழுது தொலைக்காட்சி சீரியல்தான் ஞாபகம் வருகிறது என்றும் விமர்சனம் வைத்திருக்கிறார் மாறன்.