யார் யாரை ஒதுக்குறது.. தீண்டாமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி

இந்த உலகத்தில் எது மாறினாலும் தீண்டாமை மட்டும் ஒழியாமல் உள்ளது என்பதே பலரது வருத்தமாக உள்ளது. அந்த வகையில் சமீப காலமாக குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கோவிலுக்கு செல்லக்கூடாது, சில கடைகளில் சென்று பொருட்கள் வாங்க கூடாது, சில இடங்களில் அமரக்கூடாது, கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது என பல விஷயங்கள் நடந்து கண்கலங்க வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் இவையெல்லாம் செய்தி தாள்களில் பார்த்து நகர்ந்து வரும் நாம், தற்போது தீண்டாமை விஷயம் திரையரங்கு வரை சென்றுள்ளது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என எந்த ஒரு மத பாகுபாடும், ஜாதி பிரிவினையும் இல்லாமல் மக்கள் ஒன்று கூடும் இடம் தான் திரையரங்குகள். அந்த அளவிற்கு சினிமா பலரது ரத்தத்தில் கலந்தது எனலாம்.

அந்த வகையில் அண்மையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் மற்றும் குழந்தைகளை திரையரங்கு உள்ளே சென்று படம் பார்க்க விடாமல் அங்கிருந்த ஊழியர் விரட்டிய செயல் தற்போது இணையத்தை கலங்கடித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகினி திரையரங்கில், இதுபோன்ற சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை பார்க்க டிக்கெட் வாங்கியும் அந்த பெண்ணையும், குழந்தைகளையும் திரையரங்கு வாசலிலேயே கெஞ்ச விட்டுள்ளார் அந்த ஊழியர். இதனை தட்டி கேட்கும் பொருட்டு அங்கிருந்த இளைஞர் ஒருவர், தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த பதிவு வந்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை கொந்தளித்து தீண்டாமை ஒழிப்பு குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேட்டியில் பேசியுள்ளார். அதில் யாரும் யாரையும் ஒதுக்கப்படுவதை தன்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், இதுபோன்ற சம்பவம் எங்கு நடந்தாலும் ஏற்கக்கூடியது அல்ல என கூறினார். மேலும் பேசிய விஜய் சேதுபதி மனிதர்கள் ஒன்றாக வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கிறது என அவரது பாணியில் பதிலளித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அந்த வகையில் ரோகினி திரையரங்கு விவகாரம் குறித்து பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இவரது பேட்டிக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வரும் வகையில், இதுபோன்று மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என சமூக வலைத்தளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →