ஜோக்கர் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கிய ராஜு முருகனின் முதல் திரைப்படம் குக்கூ. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் இருவரும் கண் பார்வையற்றவர்களாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட இந்த திரைப்படத்தில் தினேஷின் நண்பராக இளங்கோவன் என்பவர் நடித்திருப்பார். அந்தப் படத்தில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் அவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கண் பார்வையற்ற மனிதர் தான்.
ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவரை நாம் எந்த திரைப்படங்களிலும் காண முடியாமல் போய்விட்டது. தற்போது அவர் சென்னையில் பிளாட்பாரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வருகிறார். இந்த செய்தி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட அவர் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னைக்கு வந்தார். எப்படியாவது ஒரு பாடகராக வேண்டும் என்ற ஆசையில் அவர் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு ஒரு சில வாய்ப்புகளும் கிடைத்தது.
அப்படி அவர் பாட்டு பாடி கிடைக்கும் வருமானத்தில் சென்னையில் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஆனால் இடையில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது பிளாட்பாரத்திற்கு வந்துவிட்டார்.
சமீபத்தில் இவரை பேட்டி எடுத்த ஒரு சேனலில் அவர் சினிமாவில் எப்படியாவது ஒரு பாடகராக சாதிக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் துணை நடிகராக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த பலருக்கும் இது போன்ற அவல நிலை இருக்கிறது. இதையெல்லாம் நடிகர் சங்கம் கவனித்து தீர்வு காண வேண்டும்.
![elango](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/elango.jpg)