சமூகம் சார்ந்த பல நல்ல திரைப்படங்களில் நடித்து வருவதன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்திற்காக இவருக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த சில திரைப்படங்களையும் தவற விட்டிருக்கிறார். அவை என்னென்ன திரைப்படங்கள் என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
சார்பட்டா பரம்பரை: பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் முதலில் ஆர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் சூர்யா தான். அப்பொழுது அவர் வேறு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
துப்பாக்கி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. கலைப்புலி தாணு தயாரித்த இந்த திரைப்படத்திற்காக முதன் முதலில் சூர்யாவை தான் படக்குழு அணுகினார்கள். ஆனால் அவரால் இந்த படத்தை ஏற்க முடியாமல் போனது.
மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மிகவும் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்காக முதலில் சூர்யாவிடம் தான் கதை சொல்லப்பட்டது. தற்போது அவர் பல ப்ராஜெக்டுகளில் பிசியாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை.
தீரன் அதிகாரம் ஒன்று: கார்த்தி நடிப்பில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். ஆனால் முதலில் இந்த படத்திற்காக சூர்யாவிடம் தான் கதை சொல்லப்பட்டது. அவரால் நடிக்க முடியாமல் போகவே அவருடைய தம்பி கார்த்தி இப்படத்தில் நடித்தார்.
ஆர்ஆர்ஆர்: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பான் இந்தியா திரைப்படமாக உருவாகிய இந்த திரைப்படத்தில் முதலில் ராம்சரண் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் அப்பொழுது அவர் வேறு திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுதும் சூர்யா நடிக்க முடியவில்லையே என நினைத்து வருத்தப்படும் திரைப்படங்களில் இது முக்கியமானதாகும்.