அண்மைக் காலமாக மல்டி ஸ்டார் படங்களுக்கென தனி மவுசு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. ஏனென்றால் பிற மொழி நடிகர்கள் தங்களது மொழியில் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நம் தமிழ் சினிமாவின் சில பிரபலங்களும் வேறு மொழிகளுக்கு சென்று நடித்து பிரபலமடைந்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்தாண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து அசத்தினர். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், விக்ரம் பட பாணியில் உருவாகும் திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சூப்பர்ஸ்டார் மட்டுமே இப்படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க விரும்பமாட்டார்.
ஆனால் கமல்ஹாசனின் விக்ரம் பட பாணியை பின்பற்றலாம் என நினைத்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அந்நிறுவனமும் நெல்சனிடம் கதையை மெருகேற்றி ஜெயிலர் படத்தில் நடிகர்களை தினம் தினம் சேர்த்து வருகிறாதாம். தற்போது புது புது நடிகர்கள் அறிமுகமாகி படத்தின் பட்ஜெட் சற்று அதிகரித்து வருவதால், ரஜினியின் பேச்சை கேட்டு ஆபத்தில் சிக்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் புலம்பி வருகிறதாம்.
ரஜினிகாந்தின் இந்த புது முயற்சி தோல்வியா, வெற்றியா என்பதை பார்ப்பதை விட, படத்தில் நடிக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழுத்தமான கதைக்களம் இருந்தால் மட்டுமே படம் வெற்றிப்பெறும். ஏனென்றால் சூப்பர்ஸ்டார் படத்தை பொறுத்தவரை அவருக்கு மட்டுமே தனி கதைக்களம் அமைக்கும் பணியே பெரும் வேலையாகும். தற்போது அனைத்து நடிகர்களுக்கும் கதைக்களத்தில் முக்கியத்துவம் வேண்டும்.
எனவே இந்த விஷயத்தை நெல்சன் எப்படி கையாளப்போகிறார் என்பது தான் பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே நெல்சன், நடிகர் விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் பெருந்தோல்வியான நிலையில், நெல்சனை நம்பி மீண்டும் படம் எடுக்க சன் பிக்சர்ஸ் யோசித்தது. கடைசியில் ரஜினியின் சிபாரிசில் ஜெயிலர் படத்தை நெல்சன் உருவாக்கி வருகிறார். இந்த படம் மட்டும் தோல்வி அடைந்தால் முழு நஷ்டமும் சன் பிக்சர்ஸுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.