சினிமா செய்திகள்

கடைசியாக கெட்ட நேரத்தில் இருந்து வெளிவந்த நயன்தாரா.. சுத்தி அடிக்கும் கர்மாவுக்கு வைத்த முற்றுப்புள்ளி

திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் கை வசம் இல்லாமல் இருந்தார்.

By Arun · 29 ஜூன் 2023 · Updated 09 மே 2025
Nayanthara

Actress Nayanthara: நடிகை நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். ஒரு காலத்தில் இவருடைய கால்ஷீட்டிற்காக முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள் தவமாய் தவமிருந்தனர். ஹீரோக்களுக்கு இணையான பேர்,புகழ், சம்பளம் என வாங்கி கொண்டு மற்ற ஹீரோயின்களை ஏங்க வைத்த நயன்தாரா மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார்.

ஒரு வருடத்தில் ஒரு வாரம் பிரேக் கிடைப்பதே நயன்தாராவுக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. ஒரு வாரம் பிரேக் கிடைத்தால் உடனே விக்னேஷ் சிவன் உடன் வெளியூர் சென்று விடுவார். கடந்த வருடம் ஜூன் மாதம் தன்னுடைய காதல் கணவன் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நாளில் இருந்து நயனின் கால்ஷீட் ஈ ஆடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் கை வசம் இல்லாமல் இருந்தார். சரி விக்னேஷ் சிவனையாவது ஒரு பெரிய இயக்குனராக ஆக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட நயனின் கனவில் மண்ணை அள்ளி போட்டது ஏகே 62 ப்ராஜெக்ட். இப்போது விக்னேஷ் சிவனின் சினிமா வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு நடிப்புதான் செட் ஆகவில்லை தயாரிப்பில் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்த நயன்தாராவுக்கு அதுவும் கை கொடுக்கவில்லை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனெக்ட் திரைப்படத்திற்கு மாறி மாறி ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டும் படம் எதிர்பார்க்காத தோல்வியை அடைந்து நயன்தாராவை இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

சுத்தி சுத்தி கர்மா சுழற்றி அடித்துக் கொண்டிருந்த வேளையில், தற்போது நயன்தாராவின் மொத்த கெட்ட நேரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல் ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்திற்கு மண்ணாங்கட்டி என பெயரிடப்பட்டிருக்கிறதாம். படத்திற்கு பூஜையும் போடப்பட்டு விட்டது. ஷூட்டிங் தான் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த படத்தை பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் பணிபுரியும் ஒருவர், இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நயன்தாராவுக்கு எப்போதுமே தனிக் கதாநாயகியாக நடிக்கும் படங்கள் கை கொடுக்கும். திருமணமான பின் மார்க்கெட் மந்த நிலையில் இருக்கும் இவருக்கு இந்த படம் எந்த அளவுக்கு நயனுக்கு வெற்றியை தரும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.