உலகளவில் பெருமைப்படுத்திய தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ்.. கண்டுக்காத படக்குழு, 91 லட்சம் கொடுத்து கெளரவித்த தங்கமான மனசு!

சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அதில் சிறந்த குறும்படத்திற்காக தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தின் முதுமலை காட்டில் வசிக்கும் பொம்மன், பெல்லி என்ற முதிய தம்பதிகளுக்கும், இரு யானை குட்டிகளுக்கும் இருக்கும் உணர்ச்சிபூர்வமான கதை தான் இந்த குறும்படம்.

இந்த ஆஸ்கர் விருதின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இந்த ஆவணப்படம் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது. தற்போது எங்கு திரும்பினாலும் இதைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த ஆவண படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் விருது பெற்ற மகிழ்ச்சியில் அதை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அந்த விருதுக்கு காரணமானவர்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆஸ்கர் மேடையில் இயக்குனர் முதிய தம்பதிகளின் பெயரையும் குறிப்பிட்டு தன் நன்றியை தெரிவித்து இருந்தார். ஆனால் தயாரிப்பாளர் பொதுவான ஒரு நன்றியை மட்டும் தெரிவித்து விட்டு தனக்கு வேண்டியவர்களின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார். இது இப்போது ஒரு காரசார விவாதமாக மாறி இருக்கிறது.

ஆனால் இந்த விருதுக்கு மூல காரணமாக இருக்கும் அந்த முதிய தம்பதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து கௌரவித்திருக்கிறார். மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து, விருது வழங்கியும் பெருமைப்படுத்தியுள்ளார். அத்துடன் சேர்த்து அவர்களுக்கான பரிசுத்தொகையையும் அவர் அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் யானை காப்பகத்தில் பணிபுரியும் 91 பணியாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்ற இன்ப அதிர்ச்சியையும் அவர் கொடுத்துள்ளார். இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான். அந்த முதிய தம்பதிகளை வைத்து படம் எடுத்தவர்களே தற்போது விருது வாங்கியதும் அவர்களை மறந்து விட்டார்கள்.

ஆனால் நம் முதல்வர் அவருடைய பிசியான நேரத்திலும் அவர்களை நேரில் அழைத்து கௌரவிப்பது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் முதல்வரை நேரில் சந்தித்த பொம்மன், பெல்லி தம்பதிகள் தற்போது சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தாங்கள் நடித்த ஆவணப்படம் முதல்வர் வரை சென்றிருப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.