நிறைவேறாமல் போயும் அழகாய் சொல்லப்பட்ட 7 காதல் படங்கள்.. கண்ணீரால் மிதந்த தியேட்டர்கள்

சினிமாவை பொறுத்தவரை அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் கதைக்களம் என்றால் அது காதல் திரைப்படங்கள் தான். காதல் கதைகள் எப்போதுமே அழகான காவியங்களாகவே பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் சேரும் காதல்களை விட சேராத காதல் கதைகளுக்கு ரசிகர்கள் ரொம்பவே அதிகம். இப்படிப்பட்ட படத்தை பார்த்து தியேட்டரிலேயே கதறி அழுதவர்களும் உண்டு.

விண்ணை தாண்டி வருவாயா: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. சிம்பு மற்றும் த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் வேறொரு பரிமாணத்தை கொடுத்தது இந்த படம். படம் ரிலீசாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் கார்த்திக்-ஜெஸ்ஸியின் தாக்கம் இன்றும் சினிமா ரசிகர்களுக்கு உண்டு.

ராவணன்: காதல் கதைகளை இயக்குனர் மணிரத்தினத்தை விட யாராலும் அவ்வளவு அழகாக சொல்லிவிட முடியாது. இவருடைய இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் ராவணன். பொருந்தா காதல் கதை ஒன்றை கொஞ்சமும் படம் பார்ப்பவர்கள் முகம் சுளிக்காத அளவுக்கு சொன்னது மணிரத்தினத்துக்கே உரிய தனித்துவம் தான்.

கஜினி: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் கஜினி. சஞ்சய் ராமசாமியின் கல்பனாவை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. துறுதுறுவென இருக்கும் அசின், பக்குவமான காதலை வெளிப்படுத்தும் சூர்யா படத்தை ரொம்பவே அழகாக கட்டியிருந்தார்கள்.

சில்லுனு ஒரு காதல்: 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக இருக்கிறது. சூர்யா, ஜோதிகா, பூமிகா இந்த படத்தில் நடித்திருந்தனர். முதல் காதலை விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்தாலும், காதலியுடன் வாழ முடியவில்லையே என்ற ஒரு ஆணின் ஏக்கத்தை இந்த படம் சொல்லியிருந்தது.

ஷாஜகான்: பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை வரிசையில் நடிகர் விஜய்க்கு கிளிக்கான காதல் கதை தான் ஷாஜகான். தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தலை காதல், காதலியை அவள் விரும்புபவனுடன் சேர்த்து வைக்கும் காதல் தோல்வி என இந்த படம் சோகம் நிறைந்ததாகவே இருந்தது.

96: விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 96. படம் பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் பள்ளி காதலை கண் முன் காட்டியது. இந்த படத்தின் கதை கிட்டதட்ட கத்தி மேல் நடக்கும் நிலை தான். திருமணமான முன்னாள் காதலியை நீண்ட வருடங்களுக்கு பின் சந்திக்கும் காதலனின் உணர்வை ரொம்ப கண்ணியமாக காட்டிய படம்.

மதராசபட்டினம்: வரலாற்று கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும், அதிலும் ஒரு அழகான காதல் காவியத்தை சொல்லியது இந்த படம். சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவில், ஆங்கிலேயே கவர்னருக்கு நிச்சயிக்கப்பட்ட வெள்ளைக்கார பெண்ணும், துணி வெளுக்கும் சாதாரண சாமானியனும் காதலிக்கும் கதை. காதலி விட்டு பிரிந்தாலும் அவளையே நினைத்து தன்னுடைய இறுதி மூச்சு வரை வாழ்ந்திருப்பார் படத்தின் ஹீரோ ஆர்யா.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →