லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தனி கதாநாயகியாக தன்னுடைய முதல் படத்திலேயே இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் நெல்சன். இவருடைய படங்கள் எப்பொழுதுமே பிளாக் காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும். அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர், தளபதி விஜய்யின் பீஸ்ட் என வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்த இவருக்கு, மூன்றாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இன்றைய கோலிவுட் இயக்குனர்களின் பெரிய கனவாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் படம் குறுகிய காலத்திலேயே நெல்சனுக்கு கிடைத்திருக்கிறது. இயக்குனர் நெல்சன் இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் இந்த படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். படத்தின் போஸ்டர் வெளியான போது படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பயங்கரமாக அதிகரித்தது. மேலும் தற்போது இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இதற்காக பெரிய மாஸ்டர் பிளானை போட்டிருக்கிறார் நெல்சன்.
இந்தப் படத்தை பக்காவான பான் இந்தியா படமாக எடுக்கவிருக்கும் நெல்சன், தற்போது தரமான சம்பவமாக நான்கு மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களை களம் இறக்க இருக்கிறார். இவர்கள் இணைவதால் இந்தப் படம் மிகப்பெரிய பான் இந்தியா படமாக உருவாவதோடு, வசூலையும் அள்ளிக் குவிக்க காத்திருக்கிறது.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த ஜெயிலர் படத்தில், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்தப் படத்தில் இணைகின்றனர். 2021 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி அடைந்த புஷ்பா பட நடிகர் தான் இந்த சுனில்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார் களை தன்னுடைய படத்தில் களம் இறக்கி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார் இயக்குனர் நெல்சன். இந்த படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகும் போது அந்தந்த மாநிலங்களில் வசூலை வாரி குவிக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.