சினிமா செய்திகள்

Thalainagaram 2 Movie Review- தலைநகரமா, கொலை நகரமா.? 17 ஆண்டுகளுக்குப் பிறகு என்ட்ரி கொடுத்த ரைட், முழு விமர்சனம்

தலைநகரம் 2 எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் வாயிலாக இங்கு காண்போம்.

By Vijay · 23 ஜூன் 2023 · Updated 08 மார்ச் 2026
thalainagaram 2-movie-review

Thalainagaram 2 Movie Review: ஹீரோவாக களம் கண்ட சுந்தர் சி-க்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்த படம் தான் தலைநகரம். கடந்த 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கிறது. துரை இயக்கத்தில் தம்பி ராமையா, பாலக் லால்வாணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் வாயிலாக இங்கு காண்போம்.

முதல் பாகத்தில் ரைட்டாக அட்டூழியம் செய்யும் சுந்தர் சி பின்பு திருந்துவது போல் காட்டப்பட்டிருக்கும். இந்த இரண்டாம் பாகமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. தம்பி ராமையா உடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் சுந்தர் சி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால் வட, தென், மத்திய சென்னை ஆகிய மூன்று பகுதிகளிலும் இருக்கும் ரவுடிகளால் இவருக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

அதனால் மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுக்கும் சுந்தர் சி என்ன பிரச்சனைகளை சந்தித்தார், இதற்கு முடிவு என்ன என்பது தான் இந்த பாகத்தின் கதை. வழக்கம்போல முகத்தில் எந்த ரியாக்ஷனையும் காட்டாத சுந்தர் சி சண்டை காட்சிகளில் மட்டும் ஆக்ரோசத்தை தெறிக்க விட்டுள்ளார்.

அதை வைத்து பர்பாமன்ஸ் ஸ்கோர் செய்து விடலாம் என்ற நினைப்பில் அவர் இருக்கிறாரோ என்னவோ, பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது திரையில் நன்றாகவே தெரிகிறது. அதைத்தொடர்ந்து படத்தில் நகைச்சுவை என்பது மருந்துக்கு கூட இல்லை.

முதல் பாகத்தை தூக்கி நிறுத்தியதே வடிவேலுவின் காமெடிதான். அந்தக் குறை இரண்டாம் பாகத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு முழுக்க முழுக்க வன்முறை மட்டுமே தெறிக்கிறது. அதை பார்க்கும் போதே தலைநகரமா அல்லது கொலை நகரமா என்று கேட்கத் தோன்றுகிறது. இதற்கு இடையில் சென்டிமென்ட் காட்சிகள் மட்டும் அங்கங்கு வந்து செல்கிறது.

இப்படியாக செல்லும் கதையில் ஹீரோயினும் வழக்கமான கதாநாயகியாகவே வந்து செல்கிறார்.. பெரிய அளவில் அவருடைய நடிப்பு மனதில் நிற்கவில்லை. அதேபோன்று முகம் தெரியாத வில்லன்கள் இருப்பதும் மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஓரளவுக்கு தெரிந்த நடிகரை போட்டிருந்தால் கூட படம் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

இப்படி பல சறுக்கல்கள் படத்தில் நிரம்பி வழிகிறது. அதிலும் பின்னணி இசை மிக மிக சுமார் ரகமாகவே இருக்கிறது. சுந்தர் சி சண்டை போடும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறேன் என்ற பெயரில் கொடூரமாக இருக்கும் இசை ரசிகர்களை ரொம்பவே சோதித்து இருக்கிறது. அந்த வகையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள இந்த ரைட்டுக்கு இரண்டாம் பாகம் ராங்காக இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5