சினிமா செய்திகள்

எம்ஜிஆர் – விஜய் அரசியலில் இருக்கும் வித்தியாசம்.. ஆழம் பார்த்து காலை விட்ட மக்கள் திலகம், அகலக்கால் வைக்கும் தளபதி

எம்ஜிஆர் மற்றும் விஜய்யின் அரசியல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை

By Arun · 07 பிப் 2024 · Updated 11 மே 2025
mgr-vijay

MGR – Thalapathy Vijay: தமிழகத்தை பொறுத்த வரைக்கும் சினிமாவும், அரசியலும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் தான். தொடர்ந்து ஹிட் படங்கள் அமைந்துவிட்டால் அந்த ஹீரோ அடுத்து அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத நியதி. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தான் ஒவ்வொரு ஹீரோவின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.

விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே அவரை எம்ஜிஆர் உடன் ஒப்பீடு செய்து பேசி வருகிறார்கள். எம்ஜிஆர் போல் அவர் வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் எம்ஜிஆர் செய்த அரசியலுக்கும், விஜய் செய்து கொண்டிருக்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் அறிஞர் அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்டு அவருடைய கட்சி திமுகவில் இணைந்தார் . அந்த கட்சியில் பல வருடங்களாக பொருளாளராகவே இருந்தார், அந்த சமயத்தில் கருணாநிதியுடன் இவருக்கு நட்பு இருந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம் ஜி ஆர் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை ஆரம்பித்தார். அவர் அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து ஐந்து வருடங்கள் சினிமாவில் நடித்தார். எம்எல்ஏ ஆன பிறகும் கூட எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். முதலமைச்சர் ஆன பிறகுதான் அந்த சமயத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த அண்ணன் என் தெய்வம் படத்தில் இருந்து விலகினார்.

அகலக்கால் வைக்கும் தளபதி

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகும் சினிமாவை தொடர்ந்து அதன் மூலம் மக்களிடையே தன்னை பரிச்சயம் ஆக்கிக் கொண்டார். ஆனால் விஜய் கேள்வி அறிவில் அரசியலை கற்றுக் கொண்டு, கட்சி ஆரம்பித்த அன்றே அடுத்த படத்தோடு சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று அறிக்கை விடுகிறார். அவர் அகல கால் வைக்கிறாரோ என்ற சந்தேகத்தை தான் எழுப்பி இருக்கிறது.

கட்சியில் பொருளாளராக இருந்து உழைத்து, அரசியல் அனுபவம் பெற்ற பிறகுதான் எம்ஜிஆர் சொந்தமாக ஒரு கட்சியை தொடங்கினார். விஜய்க்கு கட்சியின் பணியாற்றிய அனுபவமும் கிடையாது, அரசியல் அனுபவம் கிடையாது . அப்படி இருக்கும் பட்சத்தில் எம்ஜிஆர் மற்றும் விஜய்யின் அரசியல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை.