இப்பொழுதுதான் சூப்பர் ஸ்டார் ஆக்சன் திரைப்படங்களில் மிரட்டி கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் ஆரம்ப கால திரைப்படங்களை பார்த்தால் ஒவ்வொரு திரைப்படமும் சென்டிமென்ட் கலந்து ரொம்பவே உருக்கமாக இருக்கும்.
அதேபோன்று அவர் அனைத்து விதமான கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நாவல் கதைகளிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்த இரண்டு நாவல்களைப் பற்றி இங்கு காண்போம்.
காயத்ரி எழுத்தாளர் சுஜாதாவின் கைவண்ணத்தில் வெளிவந்த இந்த நாவல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். பல சுவாரஸ்யத்துடன் வெளிவந்த இந்த நாவல் 1977 ஆம் ஆண்டு காயத்ரி என்ற திரைப்படமாக உருவானது. ரஜினி, ஜெய்சங்கர், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கதைப்படி நல்லவர் போல் நடித்து பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ரஜினி, அவர்களின் அந்தரங்களை வீடியோவாக எடுத்து பணத்துக்காக விற்று விடுவார். இது தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ளும் ஸ்ரீதேவி பின்னர் எப்படி அதிலிருந்து மீள்கிறார் என்பது தான் கதை. அதில் சூப்பர் ஸ்டார் கொடூர வில்லனாக நடித்து பலரையும் மிரட்டி இருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷி எழுதிய இந்த நாவல் 1977 ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படமாக வெளிவந்தது. ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதில் சிவக்குமார் வில்லன் வேடம் ஏற்று நடித்திருப்பார்.
அவருக்கு நண்பனாக ரஜினி நடித்திருப்பார். சிவகுமாரால் ஏமாற்றப்படும் சுமித்ராவை ரஜினி திருமணம் செய்து கொண்டு அவரின் குழந்தையை தன் மகன் போல் வளர்ப்பார். எஸ் பி முத்துராமன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இதற்குப் பிறகு ரஜினிக்கும் அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.