திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத 5 பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டாரின் மகனாக நடித்தும் ஒர்க் அவுட் ஆகாத லக்

80களில் இருந்து இப்போது வரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் படங்களில் நடித்தால் போதும் என இளம் நடிகர்கள் பலரும் தவமாய் தவம் கிடக்கின்றனர். ஆனால் அவருக்கு மகனாக நடித்தும் 2 நடிகர்களுக்கு இன்னும் லக் அடிக்கவில்லை. இப்படி திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் 5 பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம்.

ஆண்டனி: விஜய் சேதுபதியின் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. நிலம் இல்லாமல் எளிய மக்களின் கதையைப் பற்றியது தான் இந்த படம். இதில் எந்த பரபரப்பும்  ஆக்சன் காட்சிகளும் இருக்காது. இந்தப் படத்தில் நடிகர் ஆண்டனி ஹீரோவாக நடித்திருப்பார். இதில் இவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு ஆண்டனிக்கு பேட்டைக்காளி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இருப்பினும் திறமை இருந்தும் ஆண்டனியால் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்.

ஆறுமுகம் பாலா: யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தில்  நடித்திருக்கும் ஆறுமுகம் பாலா கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த படத்தில் மட்டுமல்ல ரத்த சாட்சி, திரௌபதி, உரியடி 2, மேற்கு தொடர்ச்சி மலை, தெரு நாய், ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இருப்பினும் திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்.

மணிகண்டன்: விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மணிகண்டன், அதன் பிறகு 8 தோட்டாக்கள் படத்தில் ஒரு வில்லனாகவும், விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். அதன் பின் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சூப்பர் ஸ்டாரின் கடைசி மகனாக புரட்சி போராட்டங்களை செய்து கொண்டிருக்கும் லெனின் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

அதன் பிறகு இவர் சூர்யா நடித்து தயாரித்த ஜெய் பீம் படத்தில் போலீசார் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞராக நடித்து அசத்தியதன் மூலம் தன்னை நிரூபித்தார்.  அந்தப் படத்திற்கு பிறகு  இவருக்கு பல பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

திலீபன்: 2013 ஆம் ஆண்டு திலீபன் ஹீரோவாக நடித்த படம் வத்திக்குச்சி. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகனாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரவலாக அறியப்பட்ட திலீபன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்.

இளங்கோ குமரவேல்: தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் நிறைய படங்களில் பணியாற்றியவர் நடிகர் இளங்கோ குமரவேல். அபியும் நானும் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். இந்த படத்தில் பிச்சைக்காரராக இருந்த இவரை நடிகை திரிஷா தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் ஒருவராகவே மாற்றி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு மதராசபட்டினம், பயணம்  உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் தனக்கே உரித்தான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.  

இவ்வாறு இந்த 5 நடிகர்களுக்கும் திறமை இருந்தும் அவர்களுக்கு தகுந்த சரியான வாய்ப்பு அமையாமல் தத்தளிக்கின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டாரின் வாரிசுகளாக நடித்த மணிகண்டன் மற்றும் திலீபன் இருவரும் எங்கேயோ போயிருக்க வேண்டும். ஆனால் அது எதுவுமே நடக்காமல் போனது.