பொதுவாக சினிமாவில் காதல், சென்டிமென்ட், ஆக்சன் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் இளைய தலைமுறையினருக்கு காதல் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ரக ரகமாக காதல் கதைகளை சொல்வதில் கில்லாடியான ஐந்து இயக்குனர்களைப் பற்றி இங்கு காண்போம்.
பாரதிராஜா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர்களுள் இவர் முக்கியமானவர் மண்மணம் மாறாத எதார்த்தம் மிகுந்த திரைக்கதைகளை கொடுப்பதில் இவர் கில்லாடி. அந்த வகையில் முதல் மரியாதை திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு காதலை இவர் காட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் இப்படி இவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக பல படங்களை சொல்லலாம். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறைகளுக்கு இவர் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.
மணிரத்னம் சினிமாவில் காதலுக்கென ஒரு புது ட்ரெண்ட்டை உருவாக்கிய இயக்குனர் இவராகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் ரோஜா, மௌன ராகம், அலைபாயுதே என பல காதல் திரைப்படங்களை இவர் கொடுத்திருக்கிறார். அதிலும் அலைபாயுதே திரைப்படத்தில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து தனித்தனியாக வாழும் ஜோடிகளை பற்றி காட்டியிருப்பார்.
அதற்கு நேர்மாறாக திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழும் ஜோடியை பற்றி ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் காட்டி இருப்பார். இப்படி இளசுகளின் நாடியை பிடித்து கதையை கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டும்தான். அதனாலேயே இவர் மூன்று தலைமுறைகளாக பல இயக்குனர்களுக்கும் கடுமையான போட்டியாளராக இருக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே என்ற அழகான காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இவர் அதைத் தொடர்ந்து வாரணம் ஆயிரம், காக்க காக்க போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தது. அத்திரைப்படம் வெளிவந்து தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையிலும் கார்த்திக், ஜெசியை யாராலும் மறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
செல்வராகவன் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் வித்தியாசமான ஒரு காதல் கதையாக இருந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு 7ஜி ரெயின்போ காலனி என்னும் அட்டகாசமான ஒரு காதல் கதையின் மூலம் இவர் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இப்படி ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்த செல்வராகவன் இப்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பிரபு சாலமன் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ரொமான்டிக் காதல் திரைப்படமாக வெளிவந்த அந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கும்கி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் காதலை இப்படியும் சொல்ல முடியும் என்று நிரூபித்த இயக்குனர்களில் இவரும் முக்கியமானவர்.