தமிழ் சினிமா வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்த்தால் அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவரின் கணீர் குரலும், உருக்கமான நடிப்பும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும். அவர் இறந்த பிறகும் கூட அவரின் நடிப்பு இன்னும் பேசப்பட்டு வருகிறது. இதுதான் அவருக்கு கிடைத்த அங்கீகாரம். இப்போதும் கூட அவருடைய நடிப்பை புகழ்ந்து பேசாத நடிகர்களே இருக்க முடியாது.
ஆனால் இன்றைய தலைமுறை இளசுகளுக்கு அவருடைய நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆக தெரிகிறது. பறந்து பறந்து சண்டை போடுவதையும், பஞ்ச் டயலாக் பேசுவதையும் பார்த்து இதுதான் நடிப்பு என்று சிலாகிக்கும் ரசிகர்களுக்கு சிவாஜியின் நடிப்பு திறமையை பற்றி தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் சிவாஜி சீரியஸாக நடித்து, இன்றைய தலைமுறை அதை காமெடியாக பார்த்த சில திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.
தெய்வமகன்: 1969 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி மூன்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். அப்பா, மகன்களாக நடித்திருக்கும் சிவாஜி அதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பார். அதிலும் ஒரு கதாபாத்திரம் தன்னுடைய முக அழகு குறித்து தாழ்வு மனப்பான்மையோடு இருப்பது போல் காட்டப்பட்டு இருக்கும்.
அந்த காட்சியில் சிவாஜி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் உருகச் செய்தார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு பலரையும் பிரம்மிக்க வைத்தது. ஆனால் இப்போது அதை பார்க்கும் இளைய தலைமுறை அவரின் நடிப்பை கேலி செய்து வருகின்றனர்.
மிருதங்க சக்கரவர்த்தி: 1983இல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, கே ஆர் விஜயா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதில் சிவாஜி மிருதங்க வித்வானாக இருப்பார். இதற்காக அவர் நிஜ கலைஞர்களிடம் நிறைய பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.
அதன் பிறகு தான் அவர் அந்த கதாபாத்திரத்தில் முழு உணர்ச்சியையும் கொடுத்து நடித்தாராம். சொல்லப்போனால் நிஜ கலைஞர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு அவருடைய நடிப்பு அற்புதமாக இருந்ததாம். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி மிருதங்கம் வாசிக்கும் பொழுது வாயிலிருந்து ரத்தம் கசியும். அப்போது கூட விடாமல் அவர் வாசித்துக் கொண்டிருப்பார். இது அப்போது பலரையும் வியக்க வைத்தது. ஆனால் இன்றைய தலைமுறைகள் அந்த காட்சியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
படிக்காத பண்ணையார்: 1985 இல் வெளிவந்த இந்த திரைப்படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டது. ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை இப்படம் தத்ரூபமாக காட்டி இருக்கும். அதில் சிவாஜி நவரசத்தையும் பிழிந்து நடித்திருப்பார். ஆனால் இப்போது அந்த திரைப்படத்தை பார்க்கும் தலைமுறை எதற்கு இவ்வளவு ஓவர் ஆக்டிங் என்று கலாய்த்து வருகின்றனர்.
வா கண்ணா வா: 1982ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, சுஜாதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் வயதான தம்பதிகளாக இருக்கும் சிவாஜி வீட்டில் வடிவுக்கரசி தன் கணவருடன் குடியேறுவார்.
ஆனால் சில காரணங்களால் தனிமைப்படுத்தப்படும் வடிவுக்கரசிக்கு சிவாஜி ஆதரவு கொடுப்பார். சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சிவாஜி பல உணர்ச்சிகளை காட்டி நடித்து இருப்பார். பலரும் வியந்து ரசித்த இந்த திரைப்படம் தற்போது காமெடியாக பார்க்கப்படுகிறது.
லட்சுமி வந்தாச்சு: 1986 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, பத்மினி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதில் சிவாஜி தன் மனைவி பத்மினிக்கு அடங்கி போகும் கணவனாக நடித்திருப்பார். விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஃபேமிலி ஆடியன்சுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த படத்தையும் இன்றைய தலைமுறை கலாய்த்து கொண்டு தான் இருக்கிறது.