தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே நம்மில் பலருக்கும் தோன்றும் முகங்கள் வடிவேலு, விவேக், செந்தில், கவுண்டமணி என மிகப்பெரிய லிஸ்டே இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் கவுண்டமணி, செந்தில் என்றாலே அவர்களின் திரைப்படங்களின் நகைச்சுவை காட்சிகள் என்றுமே சிரிக்கவைக்க கூடியவை. இவர்கள் இருவரும் இணைந்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர். அப்படி இவர்கள் நடித்த மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஐந்து திரைப்படங்களின் காமெடி காட்சிகளை தற்போது பார்க்கலாம்.
கரகாட்டக்காரன் : 1989ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படம் எனலாம். இப்படத்தில் காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள், கரகாட்ட நடனம் , கவுண்டமணி செந்திலின் நகைச்சுவை என படம் பட்டையைக் கிளப்பியிருக்கும். சொப்பன சுந்தரி, வாழைப்பழம் காமெடி என இப்படத்தில் கவுண்டமணி, செந்திலின் நகைச்சுவை காட்சிகள் பலரது மனப்பாட காமெடி எனலாம்.
ஜெய்ஹிந்த் : ஆக்சன் கிங் அர்ஜுன் எழுதி, இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்தில் கான்ஸ்டபிள் போலீசாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கனவில் அடிக்கடி செந்தில் தோன்றுவார். இதன் காரணமாக கவுண்டமணி தூக்கத்திலேயே நடந்து சென்று கைதிகளை சிறையில் இருந்து தப்பிக்க வைப்பது, துப்பாக்கியால் சுடுவது, உயர் அதிகாரியை அடிப்பது என பல இன்னல்களை சந்திப்பார். இந்த காமெடி காட்சிகள் இன்றுவரை பலருக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
சின்ன கவுண்டர் : நடிகர் விஜயகாந்த், சுகன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படத்தில் சலவை தொழிலாளர்களாக கவுண்டமணியும், செந்திலும் நடித்திருப்பர். இதில் செந்தில் அடிக்கடி கவுண்டமணியிடம் கேட்கும் கேள்விகளுக்கு கவுண்டமணி காண்டாகி அவருக்கு பதிலை சொல்லாமல் சில சமயங்களில் நழுவி செல்வார். அப்படித்தான் ஒருமுறை செந்திலிடம் , நீ சொல்வதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைத்துவிட்டு அதற்குப் பக்கத்திலேயே நீயும் உட்கார்ந்துக்கோ என கௌண்டமணி கூறும் நகைச்சுவை காட்சி இன்று வரை பலரையும் சிரிக்க வைக்கும்.
ஜென்டில் மேன் : நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து பல கலட்டாக்களை செய்வர். அதில் செந்தில், கவுண்டமணியிடம் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசி அவரை கடுப்பேற்றுவார். அந்த வகையில் நோ டென்ஷன், மோர் வொர்க் என செந்தில் கூறும் காமெடி, டிக்கிலோனா விளையாட்டு என இத்திரைப்படத்தின் அத்தனை காமெடிகளும் சக்கை போடு போட்டிருக்கும்.
நாட்டாமை : நடிகர் சரத்குமார், குஷ்பு, மீனா நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் கவுண்டமணி மகனாகவும், செந்தில் தந்தையாகவும் நடித்திருப்பர். இதில் செந்தில் கவுண்டமணியை பார்த்து மை சன் என கூப்பிடுவது, கவுண்டமணி செந்திலை பார்த்து டேய் தகப்பா என கூறுவதும் இப்படத்தில் காமெடியை ரசிக்கும் படியாக அமைந்தது. கவுண்டமணிக்கு பெண் தேடும் வேலையை செந்திலிடம் கொடுத்தால் கடைசியில் செந்தில் அவரது மனைவியை தேடி கண்டுபிடித்து விடுவார். நாட்டாமை திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ, அதே அளவிற்கு இவர்கள் இருவரின் காமெடியும் ஹிட்டானது.