இறுதிவரை ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து மறைந்த 5 ஜாம்பவான்கள்.. கெத்து குறையாமல் நடித்த தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களாக மட்டுமல்லாமல், இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி மறைந்த 5 பிரபலங்களை பற்றி பார்ப்போம். அதிலும் ரசிகர்களால் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என புகழப்பட்ட ஜெய்சங்கர்.

ஆர் எஸ் மனோகர்: 1953 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு 1959 ஆம் ஆண்டு வெளியான வண்ணக்கிளியில் ‘சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்’ என்ற பாடலில் மனோகரின் அட்டகாசமான நடிப்பை இன்றைய தலைமுறையினரும் ரசிக்கின்றனர். எம்ஜிஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் நம்பியார், அசோகன் உள்ளிட்ட வில்லனாக உருவெடுத்தார்.

அதே சமயத்தில் வில்லன்களின் ராஜாங்கத்தில் ஆர்எஸ் மனோகர் தனக்கென ஒரு இடத்தை வகுத்தார். அதேபோல் நம்பியாரின் வில்லத்தனமும் அசோகனின் மேனரிசமும் இல்லாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் வில்லன் செய்யாத மேனரிசங்களை எல்லாம் தன் கதாபாத்திரத்திற்குள் நுழைத்து மிரட்டியவர். சில படங்களில் இவர்கள் மூவரும் இணைந்து மிரட்டியிருப்பார்கள். அதிலும் ஆயிரத்தின் ஒருவன் படத்தில் மனோகரின் நடிப்பு தனித்து வெளிப்பட்டது. இப்படி பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டிய மனோகர் கடைசி வரை சினிமாவில் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து மறைந்தவர்.

எம் என் நம்பியார்: சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக திகழ்ந்த எம் என் நம்பியார் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரது படங்களிலும் நிரந்தர வில்லனாகவே இடம்பெற்றிருக்கிறார். அதிலும் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இதனால் வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களில் எம்ஜிஆர் உடன் ஹிட் கொடுத்தார்.

இப்படி வில்லனாக மிரட்டிய நம்பியாரை இயக்குனர் கே பாக்கியராஜ் அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் குணச்சித்திர நடிகராக மாற்றினார். அதன் பின் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நம்பியார், விஜயகாந்தின் சுதேசி படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், ஹிந்தி படங்களிலும் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்திருக்கிறார். இப்படி சினிமாவில் ஜாம்பவானாக கலக்கிய நம்பியார் இறுதிவரை எந்தவித கிசுகிசுப்பிலும் சிக்காமல் ஜென்டில்மேன் என்று நிரூபித்தவர்.

ஜெய்சங்கர்: 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் ஜெய்சங்கர். அதிலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடித்த அதே காலகட்டத்தில் இவரும் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

சுமார் 100 படங்களுக்கு மேல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜெய்சங்கர் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் வில்லனாக புதிய பரிமாணத்தில் தோன்றினார். இதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். மேலும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பறிவாளனாகவும் காவலராகவும் வேடம் தரித்ததால் இவரை ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என்று ரசிகர்கள் அழைத்தனர். இப்படி கடைசி வரை கெத்தாகவே வாழ்ந்தவர்தான் ஜெய்சங்கர்.

ஏ வி எம் ராஜன்: 1963 ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ஒரு பெண் என்ற திரைப்படம் தான் இவரின் முதல் படம். இவருடன் இந்த படத்தில் நடித்த புஷ்பலதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளனர். மேலும் சிவாஜி, எம்ஜிஆர் உடனும் நிறைய படங்களில் இணைந்து நடித்த ஏ வி எம் ராஜன் கடைசி வரை தனது கெத்து குறையாமலே வாழ்ந்து மறைந்தார்.

எஸ் எஸ் ஆர்: 50 மற்றும் 60களில் தமிழ் சினிமாவில் தனது அழகு, அழுத்தம், திருத்தலான உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் புகழ்பெற்ற விளங்கியவர் எஸ் எஸ் ராஜேந்திரன். இவரது நடிப்பில் வெளியான பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது. இதுவரை 85 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் எஸ் எஸ் ஆர் கடைசி வரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து மறைந்து இருக்கிறார்.

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களும் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்தது மட்டுமல்லாமல், கெத்து குறையாமல் வாழ்ந்த மறைந்து இருக்கின்றனர் என ரசிகர்களிடம் பெயர் வாங்கினார்கள்.