பொதுவாகவே மக்கள் மனதில் ஈசியாக இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது நகைச்சுவை கதாபாத்திரம் தான். அதில் பல பேர் காமெடியனாக நடித்தாலும் இவர்கள் நடித்த காமெடிகளை மறக்கவே முடியாது அந்த அளவிற்கு காமெடிக்கு பெயர் வாங்கி இருப்பார்கள். அப்படி இருக்கையில் திடீரென்று காமெடியனாக நடித்தவர்கள் ஹீரோவாகவும் மாறி பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட காமெடியன்களை பற்றி பார்க்கலாம்.
வடிவேலு: இவர் முதலில் காமெடியனாக என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஆத்தா உன் கோயிலிலே, சின்ன கவுண்டர், இளவரசன், சிங்காரவேலன், தெய்வவாக்கு போன்று தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் காமெடியாக நடித்த காதலன், ராசையா, காலம் மாறிப்போச்சு, வெற்றிக்கொடி கட்டு, தவசி போன்ற படங்களில் மிகப்பெரிய காமெடியனாக வலம் வந்தார். இப்படி தொடர்ந்து காமெடியாக நடித்த இவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வேறு நடிகர்களுடன் சேராமல் இவரே ஹீரோவாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி, தெனாலிராமன், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சூரி: இவர் நடிகராக வரவேண்டும் என்ற ஆசையிலே சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி எந்த கதாபாத்திரங்களும் கிடைக்காமல் ஒரு காமெடியனாக வின்னர் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் கதாபாத்திரம் பெரிதாக இவருக்கு அங்கீகரிக்கப்படவில்லை. அதன்பின் வெண்ணிலா கபடி குழுவில் 50 பரோட்டாக்களை சாப்பிட்டுவிட்டு மீண்டும் அந்த கோட்டை அழித்துவிட்டு நான் மறுபடியும் சாப்பிடுகிறேன் என்ற காமெடியின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். பிறகு சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் மூலம் பெரிய காமெடியனாக வந்தார். இதற்கடுத்து தற்பொழுது விடுதலை படத்தில் சூரி கடின உழைப்பை போட்டு எல்லார் மனதிலும் ஹீரோவாகவும் முத்திரை பதித்து விட்டார். அடுத்ததாக இவருக்கு ஹீரோ வாய்ப்புகள் தொடர்ந்து இவரை தேடி வருகிறது.
கவுண்டமணி: 80,90களில் நகைச்சுவை நடிகராக ஆதிக்கம் செலுத்தியவர் தான் கவுண்டமணி. சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தவர். இவர் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். இதனை அடுத்து கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கன்னி ராசி, உலகம் பிறந்தது எனக்காக, சின்னத்தம்பி, சின்ன கவுண்டர், சிங்காரவேலன், நாட்டாமை, முறை மாமன், இந்தியன் போன்ற பல படங்களில் நடித்து மிகப்பெரிய காமெடியனாக வலம் வந்தார். அதிலும் இவர் செந்திலுடன் ஜோடி போட்டு செய்யும் லூட்டிக்கு அளவே கிடையாது. இதற்கிடையில் இவருக்கு ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்ததால் பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
யோகி பாபு: இவர் யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தில்லாலங்கடி, வேலாயுதம், கலகலப்பு, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம் போன்ற படங்களில் காமெடியனாகவே தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதன் பிறகு நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் மிகவும் பிரபலமான காமெடியனாக மாறிவிட்டார். அதன் பின் இவருக்கு சினிமா கேரியரில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியது என்றால் அது கோலமாவு கோகிலா. பிறகு கூர்கா, மண்டேலா, பேய் மாமா பன்னிக்குட்டி போன்ற படங்களில் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.
சந்தானம்: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக வந்த இவர் மன்மதன் படத்தின் மூலம் சிம்பு இவருக்கு ஒரு வாய்ப்பு அளித்தார். இதனை அடுத்து சச்சின், பொல்லாதவன், அறையில் 305ல் கடவுள், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் கண்ணாடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் காமெடியனாக நடித்து சிறந்த நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் ஆழமாக இடத்தை பிடித்து விட்டார். அதனை அடுத்து இவருக்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் படத்தில் ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமாகி வருவதால் ஒரு வயித்தெரிச்சலில் நாமளும் நடிகராக வரவேண்டும் என்ற ஆசையில் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடாமல் மறுபடியும் காமெடி நடிகராக போய் விடலாமா என்று நினைப்பில் சுற்றி வருகிறார்.