இந்திய சினிமாவின் கவர்ச்சிநாயகி 1960ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த நடிகை சில்க் ஸ்மிதா, விஜயலட்சுமி என்ற தாய் தந்தையர் வைத்த பெயரிலேயே சினிமாவில் அறிமுகமானார். குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த சிலுக்கு ஸ்மிதா, பின்னர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டு பல இன்னல்களை சந்தித்தார். திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்க சிலுக்கு ஸ்மிதா சென்னைக்கு வந்தார்.
தனது சிறு வயது கனவான சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள கிடைக்கும் வேலைகள் எல்லாம் செய்து, சில்க் ஸ்மிதா சென்னையில் தனது உறவினர் வீட்டில் தங்கி சினிமாவில் நடிப்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். அப்போது தான் நடிகரும், இயக்குனருமான வினுச்சக்கரவர்த்தி, சில்க் ஸ்மிதாவை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நாயகியாக அறிமுகம் செய்து வைத்தார். அத்திரைப்படத்தின் மூலமாக தான் சில்க் என்ற பெயர் இவருக்கு கிடைத்தது
இத்திரைப்படம் ஹிட்டான நிலையில் சில்க்ஸ்மிதாவிற்கு பல கவர்ச்சி கதாபாத்திரங்கள் வரிசையில் வர ஆரம்பித்தன. ஒருமுறை சில்க் ஸ்மிதாவின் குருநாதரான வினுசக்கரவர்த்தி, நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு முன்பாக நிற்கும்போது ஒரு கண்ணை பார்த்தேன், அந்த கண்கள் நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான கண்கள் என்று சிலுக்கு ஸ்மிதாவை புகழ்ந்து தள்ளினார்.
அப்படிப்பட்ட சிலுக்கு ஸ்மிதா தமிழ் மொழியையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தொடர்ந்து தனது வாழ்நாளில் 450 திரைப்படங்களில் நடித்தார். ஒரு படம் ஹீரோக்களுக்காக 50 சதவிகிதம் ஓடுகிறது என்றால் சில்க் ஸ்மிதாவிற்காக 50 சதவிகிதம் ஓடும். அந்த அளவிற்கு சில்க் ஸ்மிதா ஒவ்வொரு முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் தேவைப்பட்டவர். இதன் காரணமாக இந்திய சினிமாவின் தயாரிப்பாளர்கள் சில்க்கின் கால்ஷீட்டிற்காக கால் கடுக்க நின்ற கதையெல்லாம் உண்டு.
ஒரு முறை இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், யார் இந்த சிலுக்கு ஸ்மிதா என்று கேட்கும் அளவிற்கு இவரின் புகழ் இந்தியா முழுவதும் கொட்டிக்கிடந்தது. யாரிடமும் அதிகமாக பேசாமல் தனது நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்ட சிலுக்கு ஸ்மிதா, தனது உடலை மட்டுமே நேசிக்கும் ஆண்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தான் இப்படி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக திமிர் பிடித்த நடிகை என்றெல்லாம் சிலுக்கு ஸ்மிதாவை பலரும் ஏசியதுண்டு.
இருந்தாலும் சிலுக்கு ஸ்மிதா பல ஆணாதிக்கத்தை தாண்டி, இந்திய சினிமாவையே தனது கவர்ச்சியாலும் அழகாலும் ராணியாக வலம் வந்து நடிகர்களுக்கு மேலாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார். அப்படிப்பட்ட சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாம் இருந்தும் மன நிம்மதி இல்லை என்று கடைசி வரை அவர் புலம்பினார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டு ரசிகர்களை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டார். கவர்ச்சியே பிடிக்காதவர்களுக்கு கூட பிடித்தமான சில்க் ஸ்மிதாவிற்கு 62 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.