அந்த காலத்தில் ஆரம்பித்து இப்போது வரை நம் தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் கொடிகட்டி பறந்துள்ளனர். அதிலும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கவர்ந்த பல ஹீரோயின்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் 90 காலகட்டத்தில் தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகை இன்று வரை நடிப்பில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை தான் சுகன்யா. 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான அவர் தன் நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் தனக்கான ஒரு இடத்தையும் படித்தார்.
தற்போது அவர் நடிக்க வந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இப்போதும் அவருடைய பெயரை சொல்லும் படியான ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது. இதுவே அவருக்கு அடையாளமாய் மாறியும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவர் எந்த படத்தில் நடித்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை பாராட்ட வைத்து விடுவாராம். அதனாலேயே இவருக்கு எல்லா விஷயங்களும் ஏறுமுகமாகவே இருந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மூன்றாவது திரைப்படமே இவருக்கு மிகப்பெரும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதாவது 1992 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் ஜோடியாக இவர் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் முதல் பாதியில் குறும்புக்கார பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிமிக்க பெண்ணாகவும் நடித்து அசத்தியிருப்பார்.
அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் விஜயகாந்த், சுகன்யா இருவரின் ஜோடி பொருத்தமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்ற ஒரு கிசுகிசுவும் அந்த காலத்தில் அதிகமாக பரவியது. இப்படி இந்த படத்தால் பிரபலமான சுகன்யாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. மேலும் அந்த வருடத்திலேயே இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த விருது சின்ன கவுண்டர் திரைப்படத்திற்காக மட்டும் கொடுக்கப்படவில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து, செந்தமிழ் பாட்டு ஆகிய மூன்று திரைப்படங்களுக்காகவும் சேர்த்து ஒரே விருதாக கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகைக்கும் இப்படி ஒரு பெருமை கிடைத்தது கிடையாது. அந்த வகையில் சுகன்யா இன்று வரை அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகையாக இருக்கிறார்.