சினிமா பின்னணி கொண்ட நடிகைகள் இந்தியாவில் எந்த மொழியில் நடிக்க போனாலும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவே சினிமாவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் அந்த நடிகைகள் பல முயற்சிகள் எடுத்து தான் சினிமாவில் கால்பதிக்க முடியும்.
அப்படிப்பட்ட நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில் நாம் யாரும் அறிந்திராத பல சோகக் கதைகள் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் எட்டு வயதில் இருந்த போது அவரது தந்தை ராஜேஷ் மரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து அவரது தாயார் புடவைகளை வீடு வீடாக சென்று விற்று தங்களது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசி மகள் என்ற நிலையில், இவருக்கு மொத்தம் மூன்று அண்ணன்மார்கள் இருந்துள்ளனர்.
ஒரு அண்ணன் காதல் தோல்வியால் தனது வாலிப வயதிலேயே தற்கொலை செய்து உயிரிழந்தார். மற்றொரு அண்ணன் நன்றாக படித்து மாதம் நல்ல ஒரு சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில், விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீண்டு வரவும் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும் சினிமாவுக்குள் நுழைந்தார்.
சினிமாவிற்குள் வருவதற்கு முன்பாகவே பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வந்தார்.பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவரை, நீயெல்லாம் கதாநாயகியாக ஆகமுடியாது, கிளம்பி போ என பலரும் ஐஸ்வர்யா ராஜேஷை உதறித்தள்ளினர்.
அந்த சமயத்தில் தான் இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்பு விஜய் சேதுபதியின் சிபாரிசின் பேரில் அவருடனே ஜோடி சேர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி உள்ளிட்ட தொடர் படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பல திரைப்படங்களில் நடித்திருந்த தருவாயில் அவரது திரை வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படம் தான் காக்கா முட்டை. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாது. இப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் என்றால் அவர் சிறு வயதில் சந்தித்த இழப்பு தான் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.