சினிமா, அரசியல் என இரண்டிலும் தனிமனிதனாக அசுர வளர்ச்சி அடைந்து அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படிப்பதில் கவனம் செலுத்தாமல் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார்.
இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த்-க்கு தூரத்து இடி முழக்கம் படம் பாராட்டைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவரை அதிரடி நாயகனாக மாற்றிய படம் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் தான். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியாகி நல்ல லாபத்தை பெற்று தந்தது.
சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். ரஜினிக்கு எப்படி ஒரு பாலச்சந்தரோ அதேபோல் விஜயகாந்துக்கு எஸ்ஏசி உறுதுணையாக இருந்தார். இதைத் தொடர்ந்த விஜயகாந்த், எஸ்ஏசி கூட்டணியில் சாதிக்கொரு நீதி, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.
எஸ்ஏசி இயக்கத்தில் விஜயகாந்த் 17 படங்கள் நடித்துள்ளார். இதில் 80 சதவீத படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. மேலும் எஸ்ஏசி படங்கள் தொடர் சறுக்கலை சந்தித்து வந்த நிலையில் அப்போது விஜயகாந்த் தான் அவரை காப்பாற்றி இருந்தார். அந்த சமயத்தில் எஸ்ஏசிக்கு செந்தூரா பூவே படம் நடித்துக் கொடுத்து தூக்கிவிட்டார்.
ஒரு நடிகருக்கு இயக்குனருடன் ஏதோ ஒரு பிணைப்பு அல்லது பாசம் இருந்தால் மட்டுமே அவர்களுடன் அடுத்தடுத்து படங்களில் பணியாற்ற முடியும். அவ்வாறு தமிழ் சினிமாவில் எஸ்ஏசி, விஜயகாந்த் கூட்டணியில் மறக்க முடியாத படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளது.
மேலும் சமீபத்தில் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மிகவும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்த எஸ்ஏசி எல்லாருக்கும் உதவிய மனுஷனுக்கு இந்த நிலைமை என கண்கலங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.