Ahmedabad plane crash : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் இன்று விபத்துக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏர் இந்தியாவின் ஏஐAI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்டு உள்ளது.
இந்த விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் அருகில் இருந்த மேகானி நகரின் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி நொறுங்கியது. அந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியையும், துயரத்தையும் கொடுத்திருக்கிறது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது துயரத்தை சமூக வலைத்தளம் வாயிலாக கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இதே விமானத்தில் பயணித்த ஆகாஷ் வத்சா இதில் தொழில்நுட்பம் சரியாக செயல்படவில்லை என ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்
இதனால் விமானத்தை சரியாக பரிசோதனை செய்யவில்லையா என்ற பரபரப்பும் நிலவி வருகிறது. மேலும் இந்த விமான விபத்தில் தனது மகளை பார்ப்பதற்காக லண்டன் சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன், எனது தொழில் ரீதியான வாழ்க்கையில் இது மிக மோசமான நாளாக அமைந்துவிட்டது என கூறியிருக்கிறார். மேலும் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
அதோடு காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை ஏற்பதாகவும், சேதம் அடைந்த மருத்துவ கல்லூரி விடுதியை கட்டி தரப்படும் என்றும் கூறியிருக்கின்றனர். பெரும் துயரமான இந்த சம்பவம் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.