எதிர்க்க திராணி இல்ல, 18 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த செந்தில் பாலாஜி.. குமுறிய விஜய் டிவி பிரபலம்

Minister Senthil Balaji: இன்று காலை முதலே தமிழக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. முறைகேடு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்றைய தினம் சோதனை செய்தனர்.

கிட்டத்தட்ட நள்ளிரவு வரை நீடித்த அந்த சோதனையில் அமைச்சரை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை கைது செய்தது. அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படவே உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த வீடியோ காட்சிகள் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இது மனித உரிமை மீறல் என பிக்பாஸ் பிரபலமான விக்ரமன் தன் எதிர்ப்பை காட்டியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறது. அமலாக்க துறையின் இந்த செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அமைச்சரை எதிர்க்க திராணி இன்றி அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை செய்ய முயன்றுள்ளது பாஜக என்ற சந்தேகம் எழுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனை அறிக்கை தொடர்பான ரிப்போர்ட்டையும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் விரைவில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அமைச்சரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அவ்வாறாக முதலமைச்சர் ஸ்டாலினும் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார். மேலும் அமைச்சர் அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விக்ரமன் பகிரங்கமாக பாஜக மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.