பிரம்மாண்டம் என்றாலே நமக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ஷங்கர், ராஜமௌலி தான். ஏனென்றால் இப்போதைய காலகட்டத்தில் இவர்கள் படங்கள் தான் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு பணத்தை எடுத்து விடுகிறார்கள்.
ஆனால் இப்போது 500, 1000 கோடி பட்ஜெட்டில் பல தொழில்நுட்பங்களை வைத்து படம் எடுப்பது கடினம் என்றாலும் 40களிலேயே 30 லட்சத்துக்கு ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற சரித்திரம் படைத்துள்ளது.
அதாவது 1948 இல் எஸ் எஸ் வாசன் இயக்கி, தயாரித்த படம் சந்திரலேகா. இந்த படத்தை முதலில் ராகவாச்சாரி இயக்குவதாக பொறுப்பேற்றார். ஆனால் தயாரிப்பாளர் வாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் இப்படத்தில் இருந்து பாதியிலிருந்து வெளியேறி விட்டார்.
வாசனே இப்படத்தை இயக்குவதாக முடிவெடுத்து கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலத்தில் இந்த படத்தை எடுத்த முடித்தார். சந்திரலேகா படம் வெளியான சமயத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த படமாக இப்படம் பார்க்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் மற்றொரு சிறப்பு அம்சமும் உள்ளது.
அதாவது சந்திரலேகா படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பலதரப்பட்ட இசைக்கருவிகள் கொண்டு 6 மாதங்கள் ஒத்திகை பார்த்து அந்த பாடலை படமாக்கி உள்ளனர். இப்போது பாகுபலி படத்தில் உள்ளது போல காட்சி அப்போதே சந்திரலேகா படத்தில் இடம்பெற்று இருந்தது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த காலகட்டத்திலேயே இப்படிப்பட்ட பிரம்மாண்ட படத்தை அவ்வளவு மெனக்கெட்டு எடுத்துள்ளார்கள். அதை ஒப்பிடும்போது இப்போது எடுக்கப்படும் படங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்று தான் தோன்றுகிறது.