Venkat Prabhu, Sasikumar: வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் விஜய்யின் 68வது படத்தை தான் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். முதல்முறையாக இணையும் இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெங்கட் பிரபு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக அறிவித்திருந்தார். பலரும் தளபதி 68 படத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் நண்பன் ஒருவன் வந்த பிறகு என தான் தயாரிக்கும் படத்தின் அப்டேட்டை கொடுத்திருந்தார்.
ஆனந்த் இயக்கத்தில் ஆர்ஜே விஜய், ஆர்ஜே ஆனந்தி, யூடியூபர் இர்பான் மற்றும் விஜய் டிவி பாலா போன்ற பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்பிரமணியபுரம். ஜெய், ஸ்வாதி, சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ஜெய்யின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தி இருந்தது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகி உள்ள நிலையில் நாளை இப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது. இதற்காக ஒரு சிறப்பு பரிசை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார்.
அதாவது நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழுவினர் சுப்ரமணியபுரம் படத்தில் உள்ளது போல கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படம் அழகர் மற்றும் பரமன் ஆகியோரை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கிறது.
மேலும் இந்த படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மீண்டும் சுப்பிரமணியபுரம் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நண்பன் ஒருவன் வந்த பிறகு படமும் நட்பை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.