தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான கவிஞராக ரசிகர்களை கவர்ந்த கபிலன் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். சமீபத்தில் இவருடைய மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
27 வயதான தூரிகை மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வந்தார். அப்படி இருக்கும் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தன் மகளின் மரணத்தை நினைத்து மீளா துயரில் இருக்கும் கபிலன் தற்போது ஒரு உருக்கமான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். படிக்கும் போது கண்ணீரை வர வைக்கும் அந்த கவிதை பலரின் மனதையும் உருக செய்துள்ளது. அதில் அவர், எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன். எங்கே போனால் என்று தெரியவில்லை அவள் காலனி மட்டும் என் வாசலில், மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா? அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா எனக்கு தெரியாது அவள் தான் என் கடவுள் குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி, யாரிடம் பேசுவது, எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க, இருந்தாலும் இருக்கிறது இருட்டு பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான். இவ்வாறு அவர் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கவிதை தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மகளை இழந்து வாடும் கபிலனுக்கு அவர்கள் ஆறுதலையும் கூறி வருகின்றனர்.